கதர் கிராமத் தொழில் வாரியத்தின் காலண்டரில் மகாத்மா காந்தி நூற்கும் படத்திற்கு பதிலாக மோடி நூற்கும் படம் இடம்பெறச் செய்ததற்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, இது மங்கள்யானின் பாதிப்பு என்று கூறியுள்ளார். மன்மோகன் சிங் ஆட்சியில் முயற்சிக்கப்பட்டு செவ்வாயில் தரையிறங்கிய மங்கள்யான் விண்கலத்தின் வெற்றிக்கு மோடி உரிமை கொண்டாடுவதை மறைமுகமாக ராகுல் குறிப்பிட்டார். கதர் கிராமத் தொழிலை காந்தி நேசித்த நிலையில், அந்த துறையின் வளர்ச்சிக்கும் தானே காரணம் என்பது போல மோடி நடந்திருப்பதாக ராகுல் கூறியுள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜியும் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மகாத்மா காந்தியின் பேரன் துஷார் காந்தி ஆட்சேபனை தெரிவித்துள்ளார். படம் எடுப்பதற்காக நூற்பது போன்று போலியாக வேடம் போடக் கூடாது என்றும் துஷார் காந்தி தெரிவித்தார்.
காதி கிராம வாரியத்துக்கு காந்தி தேவை இல்லாமல் போய்விட்டது இதிலிருந்து தெள்ளத் தெளிவாக தெரிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக காதி காலண்டரில் காந்தி படம் இடம் பெறாததை எதிர்த்து அத்துறை பணியாளர்கள் மும்பையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலண்டரில் பிரதமர் மோடி ராட்டை சுற்றும் படம் இருப்பதை எதிர்க்கவில்லை என்றும் ஆனால் அதோடு காந்தியின் படமும் இருந்திருக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில் காதி காலண்டர் மற்றும் டைரியில் காந்தி படம் இருக்க வேண்டும் என்ற அவசியம் எதுவும் இல்லை என்றும் ஏற்கனெவே சில ஆண்டுகள் காந்தி படம் இல்லாமல் இவை வெளியிடப்பட்டுள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.�,