வேலைவாய்ப்பை உருவாக்காமல் நழுவும் அரசு: ஸ்டாலின்

politics

புதிய கல்விக் கொள்கை குறித்த பிரதமர் உரைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலமாக இன்று (ஆகஸ்ட் 2) புதிய கல்விக் கொள்கை பற்றிய கருத்து மேடை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி, பேராசிரியர் கருணானந்தம், திமுக மக்களவை துணை தலைவர் கனிமொழி, விஞ்ஞானி ராமானுஜம், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, மருத்துவர் எழிலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு புதிய கல்விக் கொள்கையால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விளக்கிப் பேசினர்.

இறுதியாக உரையாற்றிய ஸ்டாலின், “இந்தக் கல்விக் கொள்கை இப்படித்தான் மிக மோசமானதாக இருக்கும் என்று இன்று நேற்றல்ல, நான்கு ஆண்டுகளுக்கு முன்பே, தலைவர் கலைஞர் கண்டித்து அறிக்கை வெளியிட்டார். 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23-ஆம் நாளன்று தலைவர் கலைஞர் ஓர் அறிக்கை வெளியிட்டார். 2014-ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு மத்தியில் அமைந்தது. வந்த உடனேயே கல்வியில் கை வைக்க ஆரம்பித்தார்கள். கல்வியில் கை வைத்தால்தான், மொத்தத்தையும் மாற்ற முடியும் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் கல்வியில் மாற்றம் செய்யத் தொடங்கினார்கள்.

இன்றைக்கு வந்திருப்பது கஸ்தூரிரங்கன் குழுவினுடைய அறிக்கை. ஆனால், இதற்கு முன்னால் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் என்ற கேபினெட் செயலாளர் தலைமையில்தான் குழு அமைத்தார்கள். அவர் 200 பக்கத்துக்கு ஓர் அறிக்கையைக் கொடுத்தார்.அந்த சுப்பிரமணியம் அறிக்கையைக் கண்டித்து தலைவர் கலைஞர் அவர்கள் அறிக்கை வெளியிட்டார்கள்” என்று அறிக்கையில் உள்ள அம்சங்களை சுட்டிக்காட்டினார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் கலைஞர் எதையெல்லாம் சொல்லிப் பயந்தாரோ, அதுதான் இன்று புதிய கல்விக் கொள்கையாக வந்துள்ளதாகத் தெரிவித்த ஸ்டாலின், “கல்வியில் சிறந்த தமிழ்நாட்டை மத யானை புகுந்து நாசம் செய்யத் திட்டமிட்டு இருப்பதைத் தான் இப்போது நாம் பார்க்கிறோம். ஒடுக்கப்பட்டோர் உரிமை – தமிழர் இன நலன் – தமிழ்மொழிக் காப்பு – தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலம் – தமிழக மேம்பாடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த புதிய கல்விக் கொள்கையை அலசி ஆராய்ந்ததில், இதில் சொல்லப்பட்ட எந்தத் தத்துவத்துக்கும் உடன்பாடானதாக இந்தக் கல்விக் கொள்கை இல்லை” என்று தெரிவித்தார்.

கல்வி கொள்கை தொடர்பாக திமுகவின் குழு அளித்த பரிந்துரைகளை குறிப்பிட்ட ஸ்டாலின், இந்த புதிய கல்விக் கொள்கையை மொத்தமாக திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். நாம் மட்டுமல்ல; இந்தியாவில் உள்ள பல்வேறு அமைப்புகள், கல்வியாளர்கள் இந்தக் கோரிக்கையை வைத்தார்கள். ஆனால் அது எதையும் ஏற்காமல் மத்திய அரசு, அந்தக் கொள்கையை அமல்படுத்தி விட்டது என சாடினார்.

தொடர்ந்து, “மத்திய கல்வி நிறுவனங்களில் ஐந்தாம் வகுப்புவரை தாய்மொழிக் கல்வி என்பது கட்டாயமில்லை. மாநில அரசுகள் விருப்பத்துக்கு ஏற்ப முடிவு செய்யலாம் என்று நேற்றைய தினம் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார். மத்திய அரசுப் பள்ளிகளில் தாய்மொழிக் கல்வியைச் செயல்படுத்த இயலாது என்று அதிகாரிகள் சொன்னதால் மத்திய அரசு பல்டி அடித்துள்ளது.

ஐந்தாம் வகுப்புவரை தாய்மொழியிலேயே பயிற்றுவிக்க வேண்டும். அதனை எட்டாம் வகுப்புவரை நீட்டிக்கவும் செய்யலாம் என்று இரண்டு நாட்களுக்கு முன்னால் சொன்னதும் இதே மத்திய அரசுதான். இப்போது அதில் மட்டும் பின்வாங்குகிறார்கள் என்றால், இவர்களுக்கு நிரந்தரமான கொள்கை என்று எதுவும் இல்லை என்று தெரிகிறது” என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், “நேற்றைய தினம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இக்கல்விக் கொள்கை பற்றி உண்மைக்குப் புறம்பான கருத்துக்களைப் பேசி இருக்கிறார்.மாணவர்களின் ஒளிமயமான எதிர்காலத்தை மனதில் கொண்டு இத்திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம் என்று சொல்லி இருக்கிறார் பிரதமர்.இப்போது நீங்கள் அறிமுகம் செய்திருக்கும் திட்டத்தால் மாணவர்கள் பலரும் பாதியிலேயே பள்ளிகளை விட்டு விரட்டப்படுவார்கள் என்று பிரதமருக்கு சொல்ல விரும்புகிறேன்.

அனைவருக்கும் கல்வி கிடைக்கும் என்று நேற்றைய தினம் பிரதமர் அவர்கள் சொல்லி இருக்கிறார். இல்லை பிரதமர் அவர்களே… உயர் கல்விக்கு மாணவர்கள் செல்வது தடுக்கப்படும்.என்று நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். கல்வித் தரம் மேம்பாடு அடையும் என்று பிரதமர் அவர்கள் சொல்லி இருக்கிறார். கல்வி உரிமையை மறுத்து அனைவரையும் தொழிற்சாலைகளை நோக்கி துரத்துகிறீர்கள் என்று நான் குற்றம் சாட்டுகிறேன்.

தாய்மொழி மூலம் சிந்தித்து, கண்டுபிடிப்புகளை மாணவர்கள் நிகழ்த்துவார்கள் என்று பிரதமர் சொல்லி இருக்கிறார். இந்தி மூலமாகவும், சமஸ்கிருதம் மூலமாகவும் சிந்திக்க வழிகாட்டுகிறீர்கள்; தாய்மொழி புறக்கணிக்கப்படுகிறது என்று குற்றம் சாட்டுகிறேன்.வெளிச்சம் பாய்ச்சி இருக்கிறோம்” என்கிறீர்கள். “இல்லை இருந்த வெளிச்சத்தை இருட்டாக்கி இருக்கிறீர்கள் என்று சொல்கிறேன்.

வேலைவாய்ப்பைத் தேடாமல் வேலைவாய்ப்பை மாணவர்களே உருவாக்கிக் கொள்ள பாதை அமைத்துள்ளோம் என்று பிரதமர் சொல்லி இருக்கிறார். இல்லை மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும் கடமையில் இருந்து இந்த அரசு நழுவி விட்டது என்று நான் சொல்கிறேன்.பிரதமர் சொல்வது போல, அனைவருக்கும் கல்வி கிடைக்காது.பிரதமர் நாட்டு மக்களை ஏமாற்றுவதாக நினைத்து தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறார்.இந்தக் கல்விக் கொள்கை அமலானால், இன்னும் பத்து ஆண்டுகளில் கல்வி என்பது சிலருக்கு மட்டுமே சொந்தமானதாக ஆகிவிடும். கிராமங்கள் சிதைந்துவிடும். ஏழைகள் மேலும் ஏழைகளாக ஆவார்கள்.

இந்தியாவின் பலமே இளைஞர் சக்தி என்பார்கள். அந்த இளைஞர் சக்தியை பெரும்பாலும் இழந்துவிடுவோம்.இளைஞர் சக்தி இல்லாத இந்தியாவைத்தான் இந்த புதிய கல்விக் கொள்கை உருவாக்கும்” என்றும் பிரதமருக்கு பதிலளித்தார் ஸ்டாலின்.

இதனை ஆளும் கட்சி எதிர்க்க வேண்டும்.புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு மறுக்க வேண்டும்; நிராகரிக்க வேண்டும்.பேரறிஞர் அண்ணா அவர்களின் திருப்பெயரைக் கட்சியின் பெயரில் இணைத்துக் கொண்டிருக்கும் அ.தி.மு.க., மும்மொழிக் கொள்கையைக் கொண்ட புதிய கல்விக் கொள்கையை எதிர்க்காமல் மௌனம் சாதிக்கக் கூடாது. அப்படி மௌனமாக இருந்தால்; அது பேரறிஞர் அண்ணாவின் பெயருக்கு அவமானம்.அரசியல் ரீதியாக மத்திய அரசுக்குப் பயந்து தமிழ்நாட்டு மக்களின் – மாணவர்களின் எதிர்காலத்துக்கு துரோகம் செய்துவிடாதீர்கள் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

**எழில்**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *