பொதுத் தேர்வின் போது தேர்வு மையங்களில் மின் தடை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மின்சார வாரியம் மின் வினியோக மண்டல முதன்மை பொறியாளர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
நாளை மறுநாள் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்குகிறது. பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வு மே 10ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மே 6ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
கோடை வெப்பம் தகித்து வரும் நிலையிலும் மின்வெட்டு பாதிப்பு இருக்கும் நிலையிலும் பொதுத் தேர்வு நடைபெற உள்ளது.
இந்த சூழலில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறும் பொதுத் தேர்வின் போது தேர்வு மையங்களில் மின் தடை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதன்மை பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
மின்வாரியம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பொதுத் தேர்வு நடைபெறும் ஏப்ரல் 31ஆம் தேதி வரை தேர்வு மையங்களில் மின் தடை ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தடையில்லாத த்ரீ பேஸ் சப்ளை வழங்கும் வகையில் பராமரிக்க வேண்டும்.
தேர்வு மையங்களில் காலை 7 மணி முதல் தேர்வு முடியும் வரை ஏதேனும் அவசர தேவை ஏற்பட்டால் அதனைச் சரிசெய்யும் பொருட்டு களப் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
இரவு நேரங்களில் மாணவர்கள் படிப்பதற்கு வசதியாக மின்சாரத்தை நிறுத்த வேண்டாம்.
பொதுத் தேர்வு மையங்களில் மின்வாரிய அதிகாரிகள் முன்கூட்டியே மின் பாதை குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
இந்த தேர்வு காலங்களில் பராமரிப்பு பணிகளுக்காக மின் வினியோகத்தை நிறுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த சூழலில் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 3 அலகுகளில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக உற்பத்தி இன்று நிறுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
**-பிரியா**