கொரோனா பரவல் குறித்த வழக்கில், நீதிபதிகள் வாய் வார்த்தையாக கூறியதை வைத்து ஊடகங்கள் செய்தி வெளியிடக் கூடாது என தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.
”கொரோனா இரண்டாம் அலை பரவலின் தற்போதைய நிலைக்கு தேர்தல் ஆணையமே காரணம். விதிமுறைகளை முறையாக பின்பற்றாத அரசியல் கட்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்காக தேர்தல் ஆணையத்தின் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தினாலும் தவறில்லை” என சென்னை உயர் நீதிமன்றம் குற்றம் சாட்டியிருந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. அதில், “ கொரோனா தொடர்பான வழக்கில், நீதிபதிகள் வாய் வார்த்தையாக கூறியதை ஊடகங்கள் மற்றும் தினசரி செய்தித்தாள்கள் செய்தியாக வெளியிட்டன. இது தேர்தல் ஆணையத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீதிபதிகள் வாய்மொழியாக அளித்த தகவலை வாபஸ் பெற வேண்டும். இதுதொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் மீது எந்தவொரு வழக்கையும் பதிவு செய்யக்கூடாது என்று காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏப்ரல் 4 ஆம் தேதியே தமிழ்நாட்டில் பிரச்சாரம் முடிவடைந்த நிலையில், தற்போது நீதிமன்றம் அத்தகைய அவதானிப்புகளை சொல்வது ஏற்க முடியாது.
தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான பிப்ரவரி 26 அன்று கேரளா, மேற்கு வங்கம், அசாம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தது.
தேர்தல் ஆணையம் மட்டுமே கொரோனா பரவலுக்கு முக்கிய காரணம் என்று சொல்லப்பட்ட நிலையில், மார்ச் 20 முதல் ஏப்ரல் 4 வரையிலான பாதிப்புகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தேர்தல் பிரச்சாரங்கள் மட்டுமே ஒரு குறிப்பிடத்தக்க காரணியாக இல்லை.
எனவே கொரோனா இரண்டாவது அலைக்கு தேர்தல் ஆணையம் மட்டுமே ’பொறுப்பு’ என்று கூற முடியாது மற்றும் தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகளை ‘கொலை குற்றவாளிகள் என்று கூற முடியாது” என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
**வினிதா**
.�,