தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், சென்னையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை 3ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் இன்று (நவம்பர் 9) ஆய்வு செய்தார்.
தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட ரமணா நகரில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண உதவிகளை வழங்கினார். இதையடுத்து கோபாலபுரம் ஆரம்ப பள்ளி மருத்துவ முகாமை பார்வையிட்டார்.
தொடர்ந்து செம்பியம் பகுதிக்குச் சென்ற அவர், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்காக வியாபாரிகள் சங்கம் சார்பில் தயாரித்து வைக்கப்பட்டிருந்த உணவின் தரம் எப்படி இருக்கிறது என ருசித்து பார்த்தார்.
பின்னர், வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தாதன் குப்பம் குளத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள நீர்வரத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கொரட்டூர் ஏரியில் கனமழையால் ஏற்பட்டுள்ள நீர்வரத்தையும் பார்வையிட்டார்.
அதுபோன்று மதுரவாயல் தொகுதிக்குட்பட்ட போரூர் ஏரியைப் பார்வையிட்ட அவர் போரூரில் உள்ள அம்மா உணவகத்திலும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குச் சமைத்து வைக்கப்பட்டிருந்த உணவைச் சாப்பிட்டுப் பார்த்தார். அங்கிருந்த ஊழியர்களிடம் என்னென்ன உணவுகள் வழங்கப்படுகிறது எனக் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வுக்குப் பின்பு வீடு திரும்பும் போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கடந்த ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் விளம்பரப்படுத்தினர். அந்த துறை அமைச்சர் சொல்ல முடியாத அளவுக்குக் கொள்ளை அடித்துள்ளார். கடந்த ஆட்சியில் மழைக்காலத்தில் ரூ.5,000 கோடி ஒதுக்கப்பட்டது என்று தெரிவித்தார்கள். ஆனால் அதற்கான பணிகள் எதுவும் நடைபெற்றதாகத் தெரியவில்லை.
மழைநீர் வடிகால் மற்றும் கால்வாய் தூர்வாரும் பணிகளிலும் கொள்ளை அடிக்கப்பட்டிருக்கிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்று 5 மாதங்களில் மழைநீர் திட்டத்தைச் சீர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 771 கி.மீ அளவுக்குஆகாயத் தாமரை மற்றும் கழிவுகள் தூர்வாரப்பட்டு ஓரளவிற்குச் சீர்செய்யப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகள் மற்றும் மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் மழைநீரை வெளியேற்ற 560 மின் மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இதுமட்டுமின்றி மழைக்காலம் முடியும் வரை அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்க உத்தரவிட்டுள்ளேன். மாநகராட்சி சமையல் கூடங்களில் 3 வேளையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.
ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து நானே ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகிறேன். அதுபோன்று, அமைச்சர்கள், எம்.எல்.ஏ., எம்.பிக்கள் அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்” என்று கூறினார்.
ஐஏஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்ததில் தாமதம் ஏற்பட்டுள்ளது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாரே என்ற செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், பொய் சொல்வதற்கே பிறந்தவர் அவர். தேர்தலுக்கு முன்பு பொய் கூறி வந்தார். தற்போது தோல்வியடைந்த கடுப்பில் தொடர்ந்து பொய்களைக் கூறி வருகிறார். அதனைப்பற்றி கவலை இல்லை. எங்கள் பணி மக்கள் பணி, அதனை மேற்கொண்டு வருகிறோம்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.
**-பிரியா**
�,