ஜார்க்கண்ட் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அலாம்கிர் அலாம் தனிச்செயலாளர் வீட்டில் இருந்து அமலாக்கத்துறை இன்று (மே 6) கணக்கில் வராத கட்டுக்கட்டாக பணத்தை பறிமுதல் செய்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருப்பவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அலாம்கிர் அலாம்.
இவரின் தனிச்செயலாளர் சஞ்சீவ் லால், ஊரக வளர்ச்சித்துறையில் டெண்டர் ஒதுக்குவதில் கமிஷன் பெற்றதாக வந்த புகாரையடுத்து ராஞ்சியில் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை இன்று சோதனை நடத்தியது.
#WATCH | The Enforcement Directorate is conducting raids at multiple locations in Ranchi. Huge amount of cash recovered from household help of Sanjiv Lal – PS to Jharkhand Rural Development minister Alamgir Alam, in Virendra Ram case.
ED arrested Virendra K. Ram, the chief… pic.twitter.com/VTpUKBOPE7
— ANI (@ANI) May 6, 2024
இந்த சோதனையின் போது கணக்கில் காட்டப்படாத கட்டுக்கட்டான பணம் மற்றும் சில நகைகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தனர். பணத்தை இன்னும் அமலாக்கத்துறை அதிகாரிகள் எண்ணவில்லை. இருப்பினும் ரூ.30 – 40 கோடி அளவிற்கு பணம் இருக்கலாம் என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கிறார்கள்.
அமலாக்கத்துறை கைப்பற்றிய பணத்தை குவித்து வைத்து அதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், இந்த வீடியோ அரசியல் அரங்கில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக டெண்டர் முறைகேடு வழக்கில் ஊரக வளர்ச்சித்துறை முதன்மை பொறியாளர் வீரேந்திர ராமை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு கைது செய்தனர். அதன்பேரிலேயே சஞ்சீவ் லால் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரனும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிளஸ் 2 தேர்வு முடிவு: எந்த மாவட்டம் முதலிடம்?
செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு: மே 15-க்கு ஒத்திவைப்பு!