ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு இஸ்லாமிய சமுதாயத்தை சீர்குலைக்கும் நோக்கில் உள்ளது என்று மனிதேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கோவை மாநகர காவல் ஆணையாளரை இன்று (நவம்பர் 6 ) நேரில் சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் , “சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணனை சந்தித்தோம்.
ஏற்கனவே 1998 இல் நடைபெற்ற சம்பவத்தின்போதும் மக்கள் துன்பத்துக்கு ஆளாகினர். பின்னர் கோவை சகஜ நிலை திரும்ப சில ஆண்டுகள் ஆகியது.
தற்போது அமைதியான கோவை மாநகரில் அமைதியை நிலைநாட்டுவது அனைவரின் கடமை. இனி இதுபோன்ற எந்த ஒரு சம்பவமும் நடைபெற கூடாது. இதன் கவலைகளை ஆணையாளரிடம் பகிர்ந்து கொண்டோம்.
ஆணையாளர் எடுத்த முயற்சிகளை எங்களிடம் தெரிவித்தார். கடந்த குண்டுவெடிப்பின்போது ராதாகிருஷ்ணன் அமைதி திரும்ப பாடுபட்டார். அதே உணர்வோடு தற்போது பாலகிருஷ்ணன் அமைதி திரும்ப செயல்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

கோவை கார் வெடிப்பு சம்பவம் ஒற்றை ஓநாய் தாக்குதல் என காவல்துறை தெரிவிக்கின்றனர்.
ஆனால் அந்த ஒற்றை நபருக்கு இவ்வளவு பெரிய சம்பவத்தை நடத்த பின்னணி என்ன? அவரை இயக்கியது யார் என்பது வெளிக்கொண்டு வரவேண்டும். இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு காரணமான ஜெகர்ஹான் என்ற அயோக்கியனுடன் இவர்கள் தொடர்பில் உள்ளதாக தகவல் வருகிறது.
அதே நேரத்தில் யாருக்கு அரசியல் லாபம் என்ற நிலையில் பின்னணி உள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு இஸ்லாமிய சமுதாயத்தை சீர்குலைக்கும் நோக்கில் உள்ளது. அதன் ஆதரவாளர்களாலும், இஸ்லாமிய சமூகத்திற்கும், தமிழகத்திற்கும் அமைதி சீர்குலைவு ஏற்படுகிறது.
இவர்கள் யாரின் அரசியல் லாபத்திற்காக கையாட்களாக இருக்கின்றார்கள்? உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க சிறப்பான முறையில் விசாரணை செய்ய வேண்டும்.
தீவிரவாத மன நிலையில் உள்ளவர்களுக்கு உளவியல் ரீதியான கவுன்சிலிங் காவல்துறை கொடுக்க உள்ளது என்று காவல் ஆணையாளர் என்னிடம் தெரிவித்துள்ளார்.
காவல்துறை அதிகாரிகள் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுகிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு கோவையில் நடைபெற்ற சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் மாலைக்குள் அனைத்து விஷயங்களையும் கொண்டு வந்தது நமது தமிழக காவல்துறை.
எனது கருத்துப்படி கார் வெடிப்பு சம்பவத்தை தமிழக காவல்துறையே விசாரிக்க வேண்டும். அப்படி விசாரித்தால் இன்னும் பல உண்மைகள் வரும். என்.ஐ.ஏ எப்படி செய்யப்போகிறது என்பது ஒரு கேள்விக்குறி தான்” என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ரசிகர்கள் கொஞ்சும் ரஞ்சிதமே…விஜய் புதிய சாதனை!
இடைத்தேர்தல்: 4 இடங்களில் பாஜக வெற்றி!