மகாராஷ்டிரா முதல்வரின் மனைவி அம்ருதா பட்நாவிஸ் சொகுசுக் கப்பலில் ஆபத்தான இடத்தில் அமர்ந்து செல்ஃபி எடுக்கும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.
இந்தியாவின் முதல் உள்நாட்டு சொகுசு கப்பல் போக்குவரத்தை மும்பை கடல் பகுதியில் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் மற்றும் மத்திய கடல் மற்றும் தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் நேற்று (அக்டோபர் 21) தொடங்கி வைத்தனர். இந்தக் கப்பலில் இரண்டு ரெஸ்டாரன்ட், ஆறு பார்கள், ஒரு நீச்சல் குளம், டிஸ்கோத், 104 அறைகள் என அனைத்து வசதிகளும் உள்ளன.
இந்தக் கப்பலில் கப்பல் குழு உறுப்பினர்கள் 70 பேர் உட்பட 470 பேர் வரை பயணிக்கலாம் என்று கூறப்படுகிறது. அதன்படி இந்தக் கப்பலுக்கான பயண டிக்கெட் ரூ.7,500 முதல் ரூ.11,000 வரை வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை – கோவா வரையிலான கப்பலின் முதல் பயணம் நேற்று தொடங்கியது. இதில் ம.பி முதல்வர் மற்றும் நிதின் கட்கரி உள்ளிட்டோர் பயணித்தனர். அவர்களுடன் முதல்வரின் மனைவி அம்ருதா பட்நாவிசும் சென்றிருந்தார். அனைத்து வசதிகளையும் கொண்ட பிரமாண்ட கப்பலில் பல இடங்களில் நின்று செல்ஃபி எடுத்த அவர் பாதுகாப்பு எல்லையைத் தாண்டி கப்பலின் விளிம்பு பகுதியில் அமர்ந்து கொண்டு செல்ஃபி எடுத்துள்ளார்.
பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போலீசாரும் விடுத்த எச்சரிக்கையை மீறி அவர் செல்ஃபி எடுத்துள்ளார். விளிம்பு பகுதியில் இருந்து மேலே வருமாறு அறிவுறுத்தியும் அதனைப் பொருட்படுத்தாமல் அம்ருதா செல்ஃபி எடுத்துள்ளார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அபாயகரமான இடங்களில் செல்ஃபி எடுத்தால் அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அமர்ந்து முதல்வரின் மனைவி செல்ஃபி எடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
[வீடியோ காட்சி](https://twitter.com/twitter/statuses/1053937276571541505)�,