இந்திய அரசு மொத்தம் 2 லட்சம் கிலோ மீட்டர் அளவிலான நெடுஞ்சாலையை அமைக்கத் திட்டமிட்டிருப்பதாக நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இந்தியத் தொழில் துறைக் கூட்டமைப்பு சார்பாக மார்ச் 24ஆம் தேதி டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரான நிதின் கட்கரி பேசுகையில், “மாநில அரசுகளின் உதவியுடன் 2 லட்சம் கிலோ மீட்டர் அளவிலான நெடுஞ்சாலையும், 12 எக்ஸ்பிரஸ்வே சாலையும் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது சாலை அமைக்கும் பணியில் தினசரி 28 கிலோ மீட்டர் அளவிலான சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த அளவு வருகிற 2018-19 நிதியாண்டில் 40 கிலோ மீட்டராக உயர்த்தப்படும்.
சாலை அமைப்பு, கப்பல் துறை, துறைமுகம், தண்ணீர் வளம் ஆகியவற்றுக்காக வரும் ஆண்டில் ரூ.8,50,000 கோடியைச் செலவிட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கர்நாடகாவில் பெங்களூரு – மைசூர் இடையே ரூ.7,000 கோடி செலவில் புதிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி 24ஆம் தேதி தொடங்கியுள்ளது. அதேபோல, பெங்களூரு – சென்னை இடையே புதிய எக்ஸ்பிரஸ்வே ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, கர்நாடகாவின் கர்வார் துறைமுகத்தை மேம்படுத்த மத்திய அரசு ரூ.3,000 கோடியைச் செலவிட ஒப்புதல் அளித்துள்ளது. அதற்கான நிலத்தை ஒதுக்கவும் அம்மாநில அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் பொருட்களை எடுத்துச் செல்லவும் மக்கள் எளிதாகப் பயணிக்கவும் நீர்வழிப் பயணத்தில் 10,000 கடல் விமானங்கள் இன்னும் இரண்டு வருடங்களில் தேவைப்படுகின்றன” என்று கூறினார்.�,