உத்தரப் பிரதேச மக்களவை இடைத்தேர்தலில் தோல்வியுற்றதை அடுத்து, பாஜகவைச் சேர்ந்த சுப்பிரமணிய சாமி, சத்ருகன் சின்ஹா ஆகியோர் எதிர்க்குரல் எழுப்பியுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் கடந்த வாரம் நடந்த மக்களவை தேர்தலில் கோரக்பூர், புல்பூர் தொகுதிகளில் தோல்வியடைந்தது பாஜக. கடந்த 2014ஆம் ஆண்டு இந்த இரு தொகுதிகளிலும் பாஜக பெருவெற்றி பெற்றிருந்தது. குறிப்பாக, இப்போது உ.பி. முதலமைச்சராக இருக்கும் யோகி ஆதித்யநாத் கோரக்பூரிலும், துணை முதல்வர்களில் ஒருவரான கேசவ பிரசாத் மவுரியா புல்பூரிலும் வெற்றி பெற்றிருந்தனர். இந்த தொகுதிகளைத் தக்க வைக்க முடியாததால், பாஜக கட்சிக்குள் கலகக்குரல் எழுந்துள்ளது.
இதுகுறித்துப் பேசிய சுப்பிரமணிய சாமி, பாஜகவின் தோல்வி அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்திருந்தார். மேலும், “தனது சொந்த தொகுதியில் யோகி ஆதித்யநாத்தினால் வெற்றியைப் பெற இயலவில்லை. கட்சிக்கு வெற்றியைத் தேடித் தராதவர்களுக்கு ஆட்சியில் இடமளிப்பது பற்றி, பாஜக ஆட்சிமன்றக் குழு பரிசீலனை செய்ய வேண்டும்” என்று கூறியிருந்தார்.
ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடியுடன் மோதல் போக்கைக் கடைபிடித்துவரும் பாஜகவைச் சேர்ந்த நடிகர் சத்ருகன் சின்ஹா, இந்த தோல்விக்கும் அவரே காரணம் என்று குறிப்பிட்டார். ”ஜனநாயக அரசியலில் ஆணவம், அதீத நம்பிக்கை, உடனடி கோபம் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். அகந்தையுடன் செயல்படக்கூடாது. இதுபோன்ற குணங்களை அமெரிக்க அதிபர் ட்ரம்ப், எதிர்க்கட்சிகள், நண்பர்கள் என்று யாரிடமிருந்தும் ஒரு தலைவர் பெறக்கூடாது” என்று கூறினார். மேலும், யோகி ஆதித்யநாத்தின் தோல்விக்காக வருத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.
பாஜகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ரமாகாந்த் யாதவ், பிற்படுத்தப்பட்டவரையும் தலித்களையும் ஒதுக்கியதுதான் இந்த தோல்விக்குக் காரணம் என்று கூறினார். இந்த தோல்வியிலிருந்து பாடம் கற்காவிட்டால், 2019 தேர்தலில் பாஜக நசுக்கப்படும். கடவுளை வணங்கியவர் இப்போது உ.பி.யின் முதலமைச்சராக இருக்கிறார். ஆனால், அதைவைத்து மட்டுமே ஆட்சி நடத்த இயலாது. எல்லா வகுப்பினரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும்” என்று தெரிவித்தார்.
உ.பி. இடைத்தேர்தல் தோல்விக்காக, பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் யோகியைக் குறிவைத்து பாஜகவில் எதிர்க்குரல்கள் எழுந்துள்ளன. இதனால் என்ன மாற்றம் நிகழும் என்பது போகப் போக தெரியும்.
�,