�
தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என நேற்று (அக்டோபர் 20) அறிவிக்கப்பட்டுள்ளது.
தந்தை பெரியார் சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். இவரின் பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகள் தமிழக அரசியலிலும் சமுதாயத்திலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. அவரைப் போற்றும் வகையில் சமூக நீதிக்காகப் பாடுபடுபவர்களுக்கு ஆண்டுதோறும் தந்தை பெரியார் விருதைத் தமிழக அரசு வழங்கிவருகிறது. இந்த விருதைப் பெறுபவருக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும், ஒரு பவுன் தங்கப் பதக்கமும், விருதுக்கான தகுதியுரையும் வழங்கப்படும்.
தமிழக அரசு நேற்று (அக்டோபர் 20) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “2017ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் தந்தை பெரியார் விருதுக்கு சமூக நீதிக்காகப் பாடுபட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களின் சமூக, பொருளாதார, கல்வி மேம்பாடு அடைய மேற்கொண்ட முயற்சிகள், அம்மக்களின் வாழ்க்கைத் தரம் உயர கடந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் சாதனைகள் ஆகியவற்றுடன் பெயர், சுய விவரம் மற்றும் முழு முகவரியுடன் நவம்பர் 5ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்கலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருதை பண்ருட்டி ராமச்சந்திரன் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.�,