ஒரு தொழிற்சாலை தொடங்க மக்களிடம் பொது விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டியது கட்டாயமானதாகும் என ஐநா சுற்றுச்சூழல் திட்டத்தின் தலைவர் எரிக் சொல்ஹைம் தெரிவித்துள்ளார்.
ஐநா., சுற்றுச்சூழல் திட்டத்தின்(United Nations Environment Programme- UNEP) தலைவர் எரிக் சொல்ஹைம், நேற்று (26.05.2018) கொச்சியில் சூரிய சக்தியால் இயங்கும் விமான நிலையத்தை பார்வையிட வந்திருந்தார். விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
பொது விசாரணை என்பது எந்த தொழிற்சாலைக்கும் மையமான விசயமாகும். ஒரு தொழிற்சாலை தொடங்குவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடம் கருத்துகள் கேட்பதுதான் பொது விசாரணையாகும்.
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் கருத்து தெரிவித்தால் உடனடியாக அதைக் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஸ்டெர்லைட் தொழிற்சாலையை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தின்போது துப்பாக்கிச்சூட்டில் பலியான மக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். இதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வுகிடைக்கும் என நம்புகிறேன்.
அடுத்த மாதம் 5ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடியையும் மற்ற அமைச்சர்களையும் சந்திக்க இருக்கிறேன். அவர்களுடன் பிளாஸ்டிக் மாசைத் தடுக்க இந்தியாவில் மேற்கொள்ளவிருக்கின்ற நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளேன்.
கடந்த காலத்தில் தேசம் வளர வேண்டுமானால் சுற்றுச்சூழலை பொருட்படுத்தக்கூடாது அல்லது தேசம் பூமியின் சுற்றுச்சூழலைப் பராமரிக்க வேண்டுமா என்பது போன்றெல்லாம் விவாதங்கள் நடத்தப்பட்டன. இது போன்ற விவாதங்கள் அபத்தமானவை. நாம் இரண்டையும் சேர்த்தே பராமரிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.�,