அயோத்தியில் ராமர் கோயில் கட்ட சட்டம் இயற்றுவதுதான் ஒரே வழி என்று ஆர்எஸ்எஸ் தலைவரான பையாஜி ஜோஷி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் சில மாதங்களில் வரவுள்ள நிலையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட இந்துத்துவ அமைப்புகள் தங்களால் இயன்ற அளவுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. இதற்கு முன்பு அயோத்தியில் சிவசேனா, விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகள் திரண்டு அரசின் கவனத்தை ஈர்த்தன. எனினும் ராமர் கோயில் கட்ட அவசரச் சட்டம் கொண்டு வரும் திட்டம் மத்திய அரசுக்கும் பாஜகவுக்கும் இல்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
நேற்று (டிசம்பர் 9) விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் பெருந்திரளாகத் திரண்டனர். அக்கூட்டத்தில் பங்கேற்ற ஆர்எஸ்எஸ் தலைவரான பையாஜி ஜோஷி, அயோத்தியில் ராமர் கோயில் கட்ட சட்டம் கொண்டுவருவதுதான் ஒரே வழி எனக் கூறினார்.
அவர் பேசுகையில், “எந்தவொரு சமூகத்துடனும் நாங்கள் மோதவில்லை. நாங்கள் பிச்சை கேட்கவில்லை. ஆனால், எங்களது உணர்வுகளை வெளிப்படுத்துகிறோம். ராமர் கோயில் கட்ட சட்டம் இயற்றுவதுதான் ஒரே வழி. கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை இந்த இயக்கம் தொடரும்” என்று கூறினார்.
டிசம்பர் 11ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் இந்தப் பேரணி நடைபெற்றுள்ளது. இதையொட்டி ராம்லீலா மைதானத்தில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், ராமர் கோயில் கட்ட ஆதரவு திரட்டுவதற்காக விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் வீடு வீடாகச் சென்று பரப்புரை நடத்தினர்.
�,”