தொழிலதிபர் விஜய் மல்லையா கடனாகப் பெற்ற ரூ.8,000 கோடிக்கு மேற்பட்ட கடனில் வெறும் 2 சதவிகிதம் மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.
கிங்ஃபிஷர் தொழிலதிபர் விஜய் மல்லையா ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட இந்திய வங்கிகளிடம் ரூ.9,000 கோடிக்கு மேல் கடனாகப் பெற்று திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்து இங்கிலாந்து தப்பிச் சென்று அங்கு வசித்து வருகிறார். அவரிடமிருந்து கடனை வசூலிக்கவும், அவரை இந்தியா கொண்டுவரவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மல்லையாவுக்கு வழங்கப்பட்ட கடனில் வெறும் 2 சதவிகிதம் மட்டுமே வசூலிக்கப்பட்டதாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையின் கேள்வி நேரத்தின்போது, மல்லையா கடனை வசூலிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் பேசுகையில், “இந்திய பொதுத்துறை வங்கிகளின் அறிக்கைகளின்படி, மல்லையாவுக்கு வழங்கப்பட்ட கடனில் ரூ.155 கோடி மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது. மல்லையாவின் இந்திய சொத்துகளை ஏலத்தின் மூலமாக விற்றதன் மூலமே இத்தொகை கிடைத்தது. இது அவர் கடனாகப் பெற்ற ரூ.8,191 கோடியில் வெறும் 2 சதவிகிதம் மட்டுமே. மல்லையாவின் கடனை வசூலிக்க அவரது சொத்துகளை விற்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று கூறினார்.�,