kதிருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமி கிரிவலம்!

Published On:

| By admin

சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். 12 மாதங்களில் வரும் பவுர்ணமிகளில் சித்ரா பவுர்ணமி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 2 ஆண்டுகளாக சித்ரா பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.

இந்த ஆண்டு தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கத்துக்கு அதிகமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி இன்று அதிகாலை 2.33 மணிக்கு தொடங்கியது. அதற்கு முன்னதாகவே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து கிரிவலம் செல்ல தொடங்கினர்.

நள்ளிரவு 12 மணிக்கு மேல் பஸ்கள் மற்றும் வாகனங்கள் நகருக்குள் வர அனுமதி வழங்கப்படவில்லை. வாகனங்கள் நகர எல்லையில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து பக்தர்கள் கோவிலுக்கு நடந்து சென்றனர். நகரமெங்கும் சிறு சிறு வியாபாரிகள் கடை அமைத்து பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். கற்பூரம் மற்றும் தண்ணீர் பாட்டில் வியாபாரம் சூடுபிடித்துள்ளது.

மேலும் பக்தர்களுக்கு இலவச தண்ணீர் பந்தல் மற்றும் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டு அவர்களின் தாகம் தணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 40 இடங்களில் அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை திருவண்ணாமலை நகரம் பக்தர்களின் கூட்டத்தால் திணறியது. கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கிரிவலப் பாதையில் இடைவெளியின்றி பக்தர்கள் சென்று வருகின்றனர். 2 ஆண்டுக்கு பின்னர் சித்ரா பவுர்ணமி விழா களை கட்டி உள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேபோல் வியாபாரமும் களை கட்டியுள்ளது என்று வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

.

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share