நெல்லை மாவட்டம், தாமிரபரணி ஆற்றில் சோப்பு, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கூறியுள்ளார்.
தாமிரபரணி ஆற்றை பாதுகாக்கும் வகையில் நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் ‘நெல்லை நீர்வளம்’ என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
பாபநாசத்தில் தொடங்கி மருதூர் அணைக்கட்டு வரை ஆற்றின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள், குப்பை கழிவுகள், செடிகள் அகற்றப்பட்டு வருகின்றன. மொத்தம் 58 இடங்களில் நடத்தப்பட்டு வரும் இந்தத் தூய்மை பணியின் ஒரு பகுதியாக நெல்லை அருகே உள்ள அருகன்குளம் காட்டு ராமர் கோவில் பகுதியில் நேற்று சுத்தப்படுத்தும் பணி தொடங்கியது.
நெல்லை நீர்வளத்தின் கீழ் உழவாரப் பணிக்குழு சார்பில் 1.5 கிலோமீட்டர் தூரம் ஆற்றில் முட்புதர்களை அகற்றும் பணி நேற்றும் நடைபெற்றது. இந்தப் பணியை நாரணம்மாள்புரம் நான்கு வழிச்சாலை அருகே மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அங்கு படித்துறைகளைச் சீரமைக்கும் பணி உள்ளிட்டவற்றை அவர் பார்வையிட்டார்.
அப்போது நிருபர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, “தாமிரபரணி ஆற்றில் 58 இடங்களில் தூய்மை பணி நடைபெற்று வருகிறது. நெல்லை நீர்வளம் திட்டம் மூலமாக கடந்த சில மாதங்களாக இந்தப் பணி நடைபெற்று வருகிறது. தாமிரபரணி நதியை முழுமையாக தூய்மைப்படுத்துவதுதான் இதன் நோக்கம்.
குளிக்கும் தரத்தில் உள்ள இந்த நீரை, குடிக்கும் தரத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் ஆற்றில் குளிக்கும்போது ரசாயனம், சோப்பு, மக்காத பொருட்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட உள்ளது. இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு விரைவில் அமலுக்கு வரும்.
ஏற்கனவே நீர்நிலைகளில் லாரி, கார் உள்ளிட்ட வாகனங்களை சுத்தம் செய்வதற்கு தடை சட்டம் உள்ளது. அதன்படி விரைவில் அந்தந்த நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள் மூலமாக தாமிரபரணியில் வாகனங்களை சுத்தம் செய்பவர்கள் மீது சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது” என்று தெரிவித்தார்.
**-ராஜ்**
.