தன்னுடைய எட்டு நண்பர்களின் உயிரைக் காப்பாற்றிய, இளைஞர் தன் உயிரைக் காப்பாற்ற முடியாமல் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம், மேட்டூர் பகுதியைச் சேர்ந்த தமிழரசு (19) கடந்த திங்கள்கிழமை ( ஜூலை 31 ) தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுவதற்காக நாமக்கல், திருச்சங்கோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதுகலைப் பட்டப்படிப்பு படித்து வரும் தனது நண்பன் மதன் உட்பட எட்டு நண்பர்களை அழைத்துள்ளார்.
மேட்டூர் அருகே காவேரி பகுதியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடி விட்டு, ஒரு சந்தோஷமான பரிசல் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டனர். அதன்படி, ஒன்பது பேரும் ஒரே முறையில் பயணம் செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். ஆனால், பரிசல் ஓட்டுநர் ஒரே முறையில் எட்டு பேர் மட்டுமே செல்ல முடியும். ஒன்பது பேர் என்பது சற்று கடினம் என தெரிவித்துள்ளார். இருப்பினும், நாங்கள் அனைவரும் ஒரே பரிசலில் பயணம் செய்ய வேண்டும் என கூறி பயணத்தை ஆரம்பித்துள்ளனர். நன்றாகச் சென்று கொண்டிருந்த பரிசல் திடீரென கவிழ்ந்தது. இதில்,பரிசல் ஓட்டுநர் நீந்தி கரையை அடைந்துள்ளார்.
அவர்களில், மதன் என்பவருக்கு மட்டுமே நீச்சல் தெரிந்திருந்தது. இதனால், தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த தன்னுடைய எட்டு நண்பர்களையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்து சேர்த்தார். ஆனால், கடைசியில் மதன் களிமண்ணில் சிக்கிக் கொண்டு தவித்தார்.
இதுகுறித்து அவரது நண்பர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்களுடன் ஒரு குழு சம்பவ இடத்திற்கு விரைந்தன. ஆனால், மதன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். கடைசியில் அவரது உடலைத்தான் எடுக்க முடிந்தது.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், பரிசல் ஓட்டுநரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.�,