நடப்பு கல்வியாண்டில் கட்டாயம் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக 2019-2020ஆம் ஆண்டின் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. 9 மாதங்களாகப் பள்ளி மாணவர்கள் ஆன்லைனில் கல்வி கற்கின்றனர். பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும், பள்ளியில் நடத்தப்பட்ட காலாண்டு, அரையாண்டு தேர்வு மற்றும் வருகைப் பதிவு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்பட்டது.
தற்போது ஆன்லைன் வகுப்புகளில் இணைய வசதி போன்ற பிரச்சினைகளால் மாணவர்கள் சிக்கல்களை எதிர்கொள்ளும் நிலையில், மத்திய மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறை அறிவிப்பில், வருகை பதிவைக் கட்டாயமாக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. அதோடு, தமிழகத்தில் இந்த ஆண்டு அரசு பள்ளியில் மாணவர்களுக்கான காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.
எனவே நடப்பு கல்வியாண்டில் பொதுத் தேர்வு நடத்தப்படுமா அல்லது ரத்து செய்யப்படுமா, ஒருவேளை ரத்து செய்யப்பட்டால் தேர்ச்சி எதனடிப்படையில் அறிவிக்கப்படும் என பல்வேறு கேள்விகள் மாணவர்கள் மத்தியில் எழுந்தது.
இந்நிலையில் இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் , “நடப்பு கல்வி ஆண்டை பூஜ்ஜியம் கல்வி ஆண்டாக அறிவிப்பதற்கான வாய்ப்பில்லை. 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டில் கட்டாயம் பொதுத் தேர்வு நடத்தப்படும். விரைவில் அதற்கான தேர்தல் அட்டவணை வெளியிடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பிற மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு மாணவர்களுக்கு கொரோனா பரவியதைச் சுட்டிக்காட்டிய அவர், அனைத்தையும் கருத்தில் கொண்டு தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.
**-பிரியா**�,