கோவை மாவட்டம், தொண்டாமுத்துார் அருகிலுள்ள வெள்ளெருக்கம்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில். விவசாய கூலித் தொழிலாளியான இவருக்குத் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இவர் நேற்று(நவம்பர் 04) மாலை செந்தில், மனைவி மற்றும் இளைய மகன் அபிதர்ஷன் என்ற மூன்று வயதுக் குழந்தையுடன் கல்லுக்குட்டுகாடு என்ற பகுதிக்கு மாட்டுக்குப் புல் அறுக்கச் சென்றுள்ளார். அங்குப் புல் இல்லாமல் இருந்த இடத்தில் குழந்தையை விளையாட விட்டுவிட்டு, அருகிலிருந்த வயலில் கணவன், மனைவி இருவரும் புல் அறுத்துக்கொண்டிருந்தனர். அப்போது புல்லுக்குள் ஊர்ந்து சென்ற விஷப்பாம்பை கயிறு என்று நினைத்துப் பிடித்த குழந்தை அபிதர்ஷன், அந்தப் பாம்புடன் விளையாடியுள்ளான்.
இதனால், பாம்பு குழந்தையை பல இடங்களில் கடித்துள்ளது. இதனால், வலியில் துடித்த குழந்தை அழுதுள்ளது. குழந்தையின் அழுகை சத்தம் கேட்ட பெற்றோர் வந்து பார்த்தபோது, அங்கிருந்து ஒரு பாம்பு குழந்தைக்கு அருகிலிருந்து புல்லுக்குள் நழுவிச் சென்றுள்ளது.
இதையடுத்து பதறி துடித்த அவர்கள், குழந்தையைக் கோவை அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்குக் குழந்தை அபிதர்ஷனை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே இறந்து விட்டதாகக் கூறினார். இதுகுறித்து தொண்டாமுத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
�,