l
திருச்சி முக்கொம்பில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தற்காலிகத் தடுப்பு அமைக்கும் பணி இன்னும் நான்கு நாட்களில் நிறைவடையும் என மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு, திருச்சி காவிரி ஆற்றில் வினாடிக்கு இரண்டரை லட்சம் கனஅடி வீதம் வெள்ளம் பாய்ந்தது. இதனால், கடந்த 22ஆம் தேதியன்று முக்கொம்பு கொள்ளிடம் அணையில் 9 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் 8 தூண்களும் 9 மதகுகளும் இடிந்து விழுந்ததை அடுத்து, மணல் மூட்டைகளால் தற்காலிகத் தடுப்பு அமைக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. இந்தப் பணிகள் 24 மணி நேரமும் நடைபெற்று வருகின்றன. மணல் மூட்டைகளை அடுக்கும் பணியில் சுமார் 300 ஊழியர்கள் ஈடுபட்ட நிலையில், தற்போது 800 தொழிலாளர்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இரவு பகலாக மணல் மூட்டைகளை அடுக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருவதால், அவர்களுக்கு தொற்றுநோய் ஏற்படாமல் இருக்க, அங்கு சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
தற்காலிகத் தடுப்பு அமைக்கும் பணிகளை இன்று (ஆகஸ்ட் 28) ஆய்வு செய்த திருச்சி மாவட்ட ஆட்சியர் ராசாமணி, 5 அடி உயரம் கொண்ட தடுப்பு அமைக்கும் பணியில் 60 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
திருச்சி முக்கொம்பு மேலணைக்கு இனி 2 லட்சம் கனஅடி நீர் வந்தாலும் பாதிப்பு ஏற்படாது என்றும், மதகுகள் உடைந்த பகுதிகளில் தண்ணீரைக் கட்டுப்படுத்தும் பணி இன்னும் நான்கு நாட்களில் நிறைவடையும் என்றும் அவர் கூறினார்.�,