ஈரோடு மஞ்சள் சந்தையில் ரகத்திற்கு ஏற்ப விற்பனையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டது. இதனால் 40 சதவிகித மஞ்சள் விற்பனையாகவில்லை என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் மிகப்பெரிய மஞ்சள் சந்தையான ஈரோடு மஞ்சள் சந்தைக்கு, தமிழகத்தினர் மட்டுமின்றி பல்வேறு மாநில வர்த்தகர்களும் வந்து மஞ்சள் வாங்கிச் செல்வர். இந்த வாரத்திற்கான ஏலத்தில் மொத்தம் 4,500 மூட்டைகள் அளவிலான மஞ்சளை விவசாயிகள் விற்பனைக்காகக் கொண்டு வந்திருந்தனர். இதில் சுமார் 60 சதவிகிதம் மஞ்சள் விற்றுத் தீர்ந்தது. ஒழுங்குமுறை விற்பனைக் குழு சார்பாக நடத்தப்பட்ட ஏலத்தில் விரலி மஞ்சள் விலை ரூ.300 குறைவான அளவிலும், ஈரோடு மஞ்சள் வணிகக் கூட்டமைப்பால் நடத்தப்பட்ட ஏலத்தில் விரலி மற்றும் வேர் மஞ்சள் விலை ரூ.100 குறைவான அளவிலும் விற்பனையாகியுள்ளது.
ஒழுங்குமுறை விற்பனைக் குழு சார்பாக நடத்தப்பட்ட ஏலத்தில், விரலி மஞ்சள் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.7,189 முதல் ரூ.8,324 வரையில் ஏலம் போனது. அதேபோல, நடுத்தர வேர் மஞ்சள் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.6,859 முதல் ரூ.7,659 வரையில் விலை போனது. விற்பனைக்காகக் கொண்டுவரப்பட்டிருந்த 685 மூட்டைகளில் மொத்தம் 522 மூட்டைகள் மட்டுமே விற்பனையாகின. இந்த வாரச் சந்தையில் விற்பனை எதிர்பார்த்தபடி அமையாததால் வியாபாரிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
�,