S
ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பதை விட தற்போது அவரது ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சந்தேகம் என்னவென்றால் அவர் நடிப்பில் உருவாகி வரும் காலா, எந்திரன் 2.0 ஆகிய இரு படங்களில் முதலில் எது திரைக்கு வரும் என்பதே. எந்திரன் 2.0 படத்தின் பணிகள் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வருகிறது. காலா படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தான் ஆரம்பித்தது என்றாலும் படுவேகமாக படம் உருவாகிவருகிறது. இதனால் எந்திரன் 2.0க்கு முன்னாலே காலா படம் திரைக்கு வரும் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் 2.0 படத்தின் பணிகளும் வேகமாக நடைபெற்றுவருகிறது.
‘2.0’ படத்தின் இறுதிப் பாடலை ஆகஸ்ட் மாதத்தில் பிரம்மாண்டமான அரங்கில் சுமார் 12 நாட்கள் படமாக்க ஷங்கர் முடிவு செய்துள்ளார். படப்பிடிப்புக்கு முன்பாகவே ஏமி ஜாக்சன் சுமார் 10 நாட்கள் பயிற்சி மேற்கொள்ளவுள்ளார். பாஸ்கோ நடன இயக்குநராக பணிபுரிய உள்ள இப்பாடலுக்கு அரங்குகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் இப்பாடலின் இசையை இறுதி செய்யும் பணியில் இருக்கிறார்.
லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் உருவாக்கி வரும் இப்படத்தை முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் காட்சிப்படுத்தி வருகிறார்கள். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படம் ஜனவரி 25, 2018-ல் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே தீபாவளிக்கு திரைக்கு வரும் என சொல்லப்பட்டு பின் தள்ளிப்போனது போல் மேலும் தள்ளிப்போகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.�,