சசிகலா லஞ்சம் கொடுத்ததாக கூறிய பெண் அதிகாரியைப் பின்னிருந்து யாரோ தூண்டி விடுகிறார்கள் என்று அதிமுக அம்மா அணி செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, ஜூலை 13-ஆம் தேதி அவர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “சசிகலா மீதான புகார் அபத்தமானது. அடிப்படை ஆதாரம் இல்லாதது இதில் எந்த விதமான உண்மையும் இல்லை. டி.ஐ.ஜி. அந்தஸ்தில் உள்ள உயர் அதிகாரி பத்திரிகையாளர்கள் மத்தியில் பகிரங்கமாக தெரிவித்து இருப்பதன் மூலம் இதை நாம் கணக்கில் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் கூறியதை அவரை விட உயர் அந்தஸ்தில் உள்ள டி.ஜி.பி. மறுத்து இருக்கிறார். இரு அதிகாரிகள் மத்தியில் கருத்து மோதல் ஏற்பட்டு உள்ளது. அதில் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி இருக்கிறார்கள்.
ஏற்கனவே ஜெயலலிதாவுடன் சசிகலா சிறைவாசம் இருந்த போது எந்தப் பார்வையாளரையும் சந்திக்க அனுமதித்தது இல்லை. சிறைத்துறை விதிக்கு உட்பட்டே இப்போது சந்திக்கிறார். நான் ஆர்வத்துடன் அவரைச் சந்திக்க சென்றபோது புகழேந்தி மற்றும் செல்வாக்கு மிக்க பிரமுகர்கள் முயற்சி செய்தும் முடியவில்லை. அந்த அளவுக்குக் கட்டுப்பாடு உள்ளது. புகழேந்தி வெளியில் இருந்து உணவு கொண்டு வரட்டுமா என்று கேட்டபோது அதை சசிகலா மறுத்துவிட்டார். சிறையில் வழங்கப்படும் உணவே போதும் என்று கூறிவிட்டார்.
ஆனால் தற்போது உச்சநீதிமன்றத்தில் தண்டனையை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் அவர் விடுதலையாவார் என்று தொண்டர்கள் நம்பிக்கையில் இருக்கும் நிலையில் அதைத் தடுக்கும் வகையில் அவரைக் களங்கப்படுத்தும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள். இதற்காகப் பெண் அதிகாரியை யாரோ தூண்டி விடுகிறார்கள். இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. இதுகுறித்து, இன்னும் ஓரிரண்டு நாளில் தெரிந்து விடும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.�,”