திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலையில் தற்காலிக பின்னடைவு ஏற்பட்டதாகவும், சிகிச்சைக்குப் பிறகு உடல்நிலை சீராகி வருகிறது என்றும் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இன்று மாலை 7 மணிக்குப் பிறகு கருணாநிதியின் ரத்த அழுத்தம் மீண்டும் வேகமாக குறைய ஆரம்பித்திருப்பதாக காவேரி மருத்துவமனை வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகின. மாலை 8மணியிலிருந்து திமுக செயல்தலைவர் ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, கருணாநிதி மனைவி ராஜாத்தியம்மாள் என குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் காவேரி மருத்துவமனைக்கு வரத் தொடங்கினர்.
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் திமுக தொண்டர்கள் அப்பகுதியில் அதிகளவில் குவிய ஆரம்பித்தனர்.மருத்துவமனைக்குள் தொண்டர்கள் செல்ல முடியாதபடி தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு போடப்பட்டது.இரவு 9 மணிக்கு மேல் மருத்துவமனைக்குள் இருந்த வெளிநபர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிலையில் காவேரி மருத்துவமனை இன்று (ஜூலை 29) இரவு 9.50 மணியளவில் வெளியிட்ட அறிக்கையில், “முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் உடல்நிலையில் ஏற்பட்ட தற்காலிக பின்னடைவு தீவிர சிகிச்சையின் காரணமாக இயல்பாகி வருவதற்கான முக்கிய அறிகுறிகள் தென்படுகின்றன. அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தலைசிறந்த மருத்துவர்கள் அடங்கிய குழு அவருக்கு சிசிச்சை அளித்து வருகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா, “தலைவர் கலைஞர் நலமாக இருக்கிறார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறு பின்னடைவு ஏற்பட்டது உண்மைதான். ஆனால் தீவிர சிகிச்சைக்குப் பிறகு அது சீர்செய்யப்பட்டுவிட்டது.எனவே வதந்திகளை நம்ப வேண்டாம். தலைவர் கலைஞர் நலமோடு இருக்கிறார்” என்று கூறினார்.�,