மக்களுக்கு நல்லது செய்வதற்கென்றே ரஜினி, கமல் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். அதைத் தவிர அவர்களின் அரசியல் வருகையில் வேறு எந்த நோக்கமும் இல்லை என்று நடிகர் அருண் விஜய் தெரிவித்துள்ளார்.
‘தடையற தாக்க’ படத்துக்குப் பிறகு அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் கவனம் பெற்றார் அருண் விஜய். இதில் வில்லன் கதாபாத்திரத்தில் மாறுபட்ட தோற்றத்தில் நடித்திருந்த அருண் விஜய்க்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து இவர் நடித்த ‘குற்றம் 23’ படம் வெற்றி பெற்றதுடன் தெலுங்கில் ‘க்ரைம் 23’ என்ற பெயரில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் இது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அருண் விஜய், “மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘தடம்’ என்ற படத்தில் நடித்து வருகிறேன். அந்தப் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அந்தப் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறேன். இதையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் நடிக்கிறேன். இதில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி ஆகியோர் நடிக்கின்றனர். அதே போல் இந்தி, தெலுங்கில் பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் சாஹோ படத்தில் முக்கிய வேடத்தை ஏற்று நடித்து வருகிறேன்” என்று தெரிவித்தார்.
இதையடுத்து அருண் விஜய்யிடம் ரஜினி, கமல் அரசியல் வருகை பற்றி கேள்வி கேட்கப்பட்ட போது, “ரஜினியும் கமலும் மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கத்தில் அரசியலுக்கு வந்து உள்ளனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்கள் இருவரும் மக்கள் நலனில் அக்கறையுள்ளவர்கள். அதைத் தவிர அவர்களின் அரசியல் வருகையில் வேறு எந்த நோக்கமும் இல்லை. தற்போது நடிகர் சங்க கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இது சந்தோஷமான விஷயம். இதனால் நலிவடைந்த நடிகர்கள் பயன் பெறுவார்கள். திரையுலகைச் சேர்ந்த அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பது கூடுதல் பலமாக இருக்கிறது” என்று தன் எண்ணத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
�,