மத்திய பாஜக அரசு ஸ்மார்ட் சிட்டி என்ற திட்டத்தை முன்னெடுத்துவரும் நிலையில், ஸ்மார்ட் கிராமங்களை உருவாக்குவதே தனது நோக்கம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சாஃப்ட்வேர் நிறுவனங்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் தேசிய அமைப்பான ’நாஸ்காம்’ சார்பில் வருடாந்திர கருத்தரங்கு நேற்றும் இன்றும் சென்னையில் நடக்கிறது. இதில் நேற்று கலந்துகொண்டு கமல்ஹாசன் கருத்துரை ஆற்றினார்.
இந்திய தகவல் தொழில் நுட்பத் துறையின் வளர்ச்சி என்பது இந்திய மொபைல் துறையின் வளர்ச்சிக்கு அடிகோலியுள்ளது. அதுதான் கிராமங்கள் தோறும் செல்போன்களை கொண்டுபோய் சேர்த்துள்ளது. கிராமங்களில் இருக்கிற ஒவ்வொரு மனிதனும் கையில் செல்போன் வைத்திருப்பதன் மூலம் தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி முழுமை அடையும்.
மக்கள் நீதி மய்யத்தின் நோக்கம் ஸ்மார்ட் கிராமங்களை உருவாக்குவதுதான். இந்தியாவின் உண்மையான பலம் கிராமங்கள்தான். கிராமங்கள் அனைத்தும் ஸ்மார்ட் கிராமங்கள் ஆகிவிட்டால், கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு வரும் முறை தலைகீழாக மாறி அனைவரும் கிராமங்களை நோக்கிச் செல்வார்கள். நகரங்களுக்கு ஏன் செல்ல வேண்டும் என்று சிந்திக்க ஆரம்பிப்பார்கள்” என்று குறிப்பிட்ட கமல்ஹாசன்,
“இந்தியாவிலேயே மக்கள் நீதி மய்யம் என்ற கட்சி மட்டுமே மய்யவாத கட்சியாக இருக்கிறது. மய்யம் என்றால் இடதும் அல்லாத வலதும் அல்லாத என்று பொருள் அல்ல. மய்யம் என்றால் பொது மக்களுக்கான குரல்.
ஐரோப்பிய நாடுகளில் தற்போது மய்யவாத கட்சிகள் ஆட்சியைப் பிடித்து வருகின்றன. இந்தியாவில் மய்யவாத கொள்கை பேசும் ஒரே கட்சி மக்கள் நீதி மய்யம்தான். இந்தியாவிலும் மாற்றம் வரும். தொழில் நுட்பத்தால் மட்டுமல்ல சாதாரண மக்களால் அந்த மாற்றம் இந்தியாவில் நிகழும்” என்று பேசினார்.�,”