பாஜக எதிர்ப்பால் ரூ.12 லட்சம் கோடி இழப்பு: காங்கிரஸ் குற்றச்சாட்டு!

public

சரக்கு மற்றும் சேவை வரிக்கு (ஜி.எஸ்.டி.) பாஜக எதிர்ப்பு தெரிவித்ததால், நாட்டுக்கு ரூ.12 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது.

நாடாளுமன்றத்தின் மக்களவையில் ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்தும்வகையில் 4 மசோதாக்களை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிமுகம் செய்தார். அந்த மசோதாக்கள் மீதான விவாதத்தை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய சட்டத்துறை அமைச்சருமான வீரப்ப மொய்லி மார்ச் 30ஆம் தேதி வியாழக்கிழமை தொடங்கிவைத்துப் பேசுகையில், ‘புரட்சிகர வரிச் சீர்திருத்தம் என்ற பெயரில் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கொண்டுவந்துள்ளது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கை கிடையாது. இது சாதாரண குழந்தைத்தனமான நடவடிக்கைதான்.

மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியின்போது ஜி.எஸ்.டி. மசோதாவை கொண்டுவர விரும்பியது. ஆனால் அதன்பிறகு 7 முதல் 8 ஆண்டுகள் காலதாமதத்துக்குப் பிறகுதான் அந்த மசோதா நிறைவேறியுள்ளது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியின்போது அந்த மசோதாவை சில கட்சிகள் தடுத்து நிறுத்தின. அதற்கான காரணம், அந்தக் கட்சிகளுக்கு மட்டுமே தெரியும். இந்தவகையில், ஜி.எஸ்.டி. மசோதாவை காலதாமதம் செய்ததால் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் கோடி வரையிலும் இழப்பு ஏற்பட்டது. அதன்படி, கடந்த 8 ஆண்டுகளாக நாட்டுக்கு மொத்தம் ரூ.12 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மிகப்பெரிய நஷ்டத்துக்கு யார் இழப்பீடு தருவார்கள்? ஜி.எஸ்.டி. மசோதாவில் பல்வேறு வரிகளை மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசு கொண்டுவந்துள்ளது. இது ஜி.எஸ்.டி. மசோதா என்ன நோக்கத்துக்காக கொண்டுவரப்படுகிறதோ, அதற்கு எதிரானதாகும். ‘ஒரே நாடு, ஒரே வரி’ என்பது பழங்கதை ஆகிவிட்டது. ஜி.எஸ்.டி. மசோதாவில் பல்வேறு வரி விகிதங்கள், செஸ் வரிகள் இருக்கின்றன. நாட்டிலேயே மனை வணிகத்துறைதான் அதிக அளவு கருப்புப் பணத்தை உருவாக்குகிறது. இந்நிலையில், அந்தத் துறையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வராதது வருத்தத்துக்குரியது. ஜி.எஸ்.டி. வரி அமலுக்கு வந்ததும், வரி விதிப்பு தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே பெரிய யுத்தம் வெடிக்கப்போகிறது’ என்று பேசினார்.

அதையடுத்து, பாஜக எம்.பி., உதித் ராஜ் பேசியபோது, ‘ஜி.எஸ்.டி. வரியானது, வரி விதிப்பில் ஒரே மாதிரியான ஒழுங்குமுறையை நாடு முழுமைக்கும் கொண்டுவரப்போகிறது என்றும், இதனால் 120 கோடி மக்கள் பயனடைவார்கள்’ என்று பேசினார்.

பிஜு ஜனதா தளம் எம்.பி., பர்த்ருவாரி மகதாப் பேசுகையில், ‘ஜி.எஸ்.டி. மீது அதிகளவு எதிர்பார்ப்பு வைப்பது வெறும் மாயை’ என்றார்.

அதிமுக எம்.பி., வெங்கடேஷ் பாபு பேசுகையில், ‘ஜி.எஸ்.டி. வரி விதிப்பானது, சுதந்திரத்துக்குப் பிறகு வரி விதிப்பில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய சீர்திருத்தம். எனினும் அதை செயல்படுத்துவதில் பல்வேறு சவால்கள் இருக்கின்றன’ என்றார்.

சிவசேனா எம்.பி., ஆனந்த்ராவ், தெலுங்கு தேசம் எம்.பி., ஜெயதேவ் கல்லா, தெலங்கானா ராஷ்டிர சமிதி எம்.பி., கொண்டா விஷ்வேஸ்வர் ரெட்டி ஆகியோர் ஜி.எஸ்.டி. மசோதாவை ஆதரித்துப் பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி., முகமது சலீம், நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஜி.எஸ்.டி. கவுன்சில் மூலம் இடமாற்றம் செய்யப்படுவதாக விமர்சித்தார்.

திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி., கல்யாண் பானர்ஜி பேசுகையில், ‘கொள்கைரீதியில் ஜி.எஸ்.டி.யை மேற்குவங்க அரசு ஆதரிக்கிறது. ஆனால் ஜி.எஸ்.டி.யை செயல்படுத்த மத்திய அரசு அவசரப்படுவதுதான் கவலையளிக்கிறது’ என்று கூறினார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *