தேனியில் இன்று தனது மகன் வராமலேயே அவருக்கு ஆதரவாக துணை முதல்வர் ஓபிஎஸ் பிரச்சாரம் செய்தார்.
தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக ஓபிஎஸ் மட்டுமின்றி, அவரது குடும்பமே தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலையில் ரவீந்திரநாத்துக்கு ஆதரவாக வாடிப்பட்டி பகுதியில் துணை முதல்வர் ஓபிஎஸ் பிரச்சாரம் செய்தார். அப்போது பிரச்சார வாகனத்தில் வேட்பாளர் ரவீந்திரநாத் இல்லை. அமைச்சர் உதயகுமார், சோழவந்தான் எம்எல்ஏ மாணிக்கம் ஆகியோர் மட்டும்தான் இருந்தனர். வேட்பாளர் வராமலேயே அவருக்கு ஆதரவாக ஓபிஎஸ் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார்.
அந்தப் பிரச்சாரத்தில் ஓபிஎஸ் பேசுகையில், “ஜெயலலிதா ஆட்சியில் மக்களுக்கு தொடர்ந்து பல நல்ல திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. ஆனால் கருணாநிதி ஆட்சியில் பல இன்னல்களை மக்கள் சந்தித்தார்கள். இதற்கு முன்னாள் ஆண்டவர்களின் ஆட்சியின் திறமையையும், நிர்வாகத்தையும் பார்த்து இந்த தேர்தலில் மக்கள் ஒரு நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும். மத்தியில் காங்கிரஸ் திமுக கூட்டணி 10 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தது. தமிழ்நாட்டிலிருந்து அப்போது 10 அமைச்சர்கள் இருந்தார்கள். ஆனால் அவர்கள் பெயரளவில்தான் அமைச்சர்களாக இருந்தார்கள். வெறும் பொம்மைகளாகத்தான் இருந்தார்கள்” என்று குற்றம்சாட்டினார்.
நேற்று இரவு பெரியகுளம் தேவதானப்பட்டி, வடுகபட்டி, பெரியகுளம் பகுதிகளில் ஓபிஎஸ் பிரச்சாரம் செய்தபோது, தமிழகம் மட்டும்தான் ஜாதி, மத, மோதல்கள் இல்லாத மாநிலமாக திகழ்கிறது. தமிழகம் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக அதிமுக திகழ்கிறது என்று பேசினார். மேலும், “பெரியகுளம் தகுதிநீக்கம் செய்யப்பட்ட சட்ட மன்ற உறுப்பினர் கதிர்காமு உனக்கு காது கேட்கிறதா? அவருக்கு செலவு செய்து ஜெயிக்க வைத்தோம் அவருக்கு நன்றி இருக்கா?” எனவும் அமமுக பெரியகுளம் வேட்பாளர் கதிர்காமுவை ஒருமையில் சாடி பேசினார்.
�,