பணியிடங்களில் பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பு வழங்குவது சர்வதேச பொருளாதாரத்தை வளர்ச்சியடையச் செய்யும் என்று ஐ.நா.வின் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஒ) கூறியுள்ளது.
ஐ.நா.வின் சர்வதேச தொழிலாளர் அமைப்பு மேற்கொண்ட ஆய்வில், பணியிடத்தில் அதிகளவு பெண்களை பணியில் அமர்த்துவதன் மூலம் சர்வதேச பொருளாதாரத்தில் ரூ.372 லட்சம் கோடி வரை அதிகப்படுத்தலாம் என்று தெரியவந்துள்ளது. தற்போது, வேலைவாய்ப்பில் பெண்களின் பங்களிப்பு என்பது 49.4 சதவிகிதம் ஆகும். ஆண்களுடன் ஒப்பிடும் போது இது 26.7 சதவிகிதம் குறைவாகும்.
இது தொடர்பாக ஐ.எல்.ஒ.வின் துணை நிர்வாக இயக்குநர் டிபோரா கிரீன்ஃபீல்ட் கூறுகையில், பாதிக்கும் மேற்பட்ட பெண்கள் வேலையில்லாமல் உள்ள நிலையில், 58 சதவிகித பெண்கள் வேலைக்குச் செல்லவே விரும்புகின்றனர். அதேவேளையில், அவர்களது திறமைகளையும் பங்கேற்பதற்கான சுதந்திரத்தையும் கட்டுப்படுத்தும் கணிசமான சவால்கள் உள்ளன” என்று தெரிவிக்கிறார்.
உலக வேலைவாய்ப்பு மற்றும் சமூக கண்ணோட்டம்: 2017ல் பெண்களுக்கான டிரெண்ட் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ஆய்வில், வேலைவாய்ப்பில் ஆண் – பெண் வேறுபாடு என்பது தெற்காசிய, அரபு நாடுகள் மற்றும் வடக்கு ஆப்ரிக்காவில் அதிகமாக, அதாவது 50 சதவிகிதம் அளவுக்கு உள்ளது. மேலும், இந்தப் பிராந்தியங்களில் பெண்கள் வேலைவாய்ப்பில் பங்கெடுப்பது என்பது 30 சதவிகிதமாக உள்ளது. இது சர்வதேச சராசரியான 49 சதவிகிதத்தை விடக் குறைவாகும்.
சர்வதேச அளவில் பெண்களின் வேலைவாய்ப்பின்மை என்பது 6.2 சதவிகிதமாக உள்ளது. இது, ஆண்களைப் பொறுத்தவரை 5.5 சதவிகிதமாக உள்ளது. பெண்கள் வேலைக்குச் செல்ல குறைவாகவே விரும்புகின்றனர். ஆனால், அவர்கள் வேலைக்குச் செல்ல வேண்டும் என விரும்பினால், ஆண்களை விடப் பெண்களின் வேலைவாய்ப்பின்மை அதிகமாக இருக்கும். பெண்கள் வேலைக்குச் செல்வதற்கு தடையாக உள்ள காரணிகளை நாம் முதலில் கண்டறிய வேண்டும். மேலும், ஆண்களை விடப் பெண்கள் அதிக நேரம் வேலை செய்ய விரும்புகின்றனர் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.�,”