கவுரி லங்கேஷ் கொலை வழக்கின் விசாரணையில் கொலையாளிகளான இந்துத்துவா கும்பல் ஒன்று 34 எழுத்தாளர்களையும் பகுத்தறிவாளர்களையும் கொல்லத் திட்டமிட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என சிறப்பு புலனாய்வுக்குழு நேற்று (செப்-4) தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இதே நாளில்(செப்-5,2017) கர்நாடகாவின் பத்திரிகையாளரும் சமூகச்செயல்பாட்டாளருமான கவுரி லங்கேஷ் அவரது வீட்டில் முன்பாக வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கின் விசாரணையை சிறப்பு புலனாய்வுக்குழு நடத்தி வருகிறது. இதுவரை 60 பேருக்கும் மேலான இந்துத்துவ அமைப்பைச்சேர்ந்த நபர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பரசுராம் வாக்மோர் என்பவர்தான் கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். கண்காணிப்பு கேமராவில் பதிவான இவரின் நடையை வைத்து ஆய்வு செய்து இவரைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் கர்நாடகாவைச்சேரந்தவர்கள் மற்றவர்கள் மகாராஷ்டிரா மற்றும் கோவாவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் ஆயுதப்பயிற்சி அளிக்கப்பட்டு, இந்துத்துவா சிந்தாந்தத்தில் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளதாக புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சிறப்பு புலனாய்வுத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் பத்திரிகையாளர்களிடம் நேற்று பேசியபோது கூறியதாவது:
இவர்கள் இந்து தர்மத்தை பாதுகாக்க தீவிரமான முறையில் சிந்தாந்த பயிற்சியும் ஆயுதப்பயிற்சியும் அளிக்கப்பட்டவர்கள். இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட டைரி ஒன்றில் நாடு முழுவதும் உள்ள 34 எழுத்தாளர்களை கொலை செய்வதற்கு திட்டமிட்டுள்ளனர். பரசுராமின் வாக்குமூலத்தின்படி கிரிஷ் கா்நாட், கா்நாடகாவிலுள்ள நிதுமாமிதி மடத்தைச்சேர்ந்த சென்னமாலா சாமி,பகுத்தறிவாளர்கள் கேஎஸ்.பகவான் மற்றும் நரேந்திர நாயக் ஆகிய நால்வரையும் ஒரே நாளில் கொல்லவும் திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் பெரிய அளவில் பீதியை உருவாக்கவும் திட்டமிட்டுள்னர்.
மேலும் ஏற்கனவே பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் கொலையில் சரத் பாபுசாகேப் கலாஸ்கர் என்பவரும் சதி செய்துள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இவ்வழக்கின் விசாரணையில் நரேந்திர தபோல்கர்,கோவிந்த் பன்சாரே, கல்புர்கி மற்றும் கவுரி லங்கேஷ் ஆகிய நால்வரையும் இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த ஒரே கும்பல்தான் திட்டமிட்டு கொலை செய்துள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.�,