ஸ்ரீதர் சுப்ரமணியம்
**எட்டு வழிச் சாலைத் திட்டத்தில் கவனிக்க வேண்டிய அம்சங்கள்**
எட்டு வழிச் சாலை பற்றிய விவாதங்களைப் பார்க்கும்போது நான் இங்கிலாந்தில் இருந்தபோது நடந்த இரண்டு சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன.
நாங்கள் தெற்கு விம்பிள்டனில் வசித்து வந்தோம். அது அமைதியான, ஆரவாரமில்லாத ஒரு பகுதி. அங்கே ரயில் நிலையமே வெறிச்சோடித்தான் இருக்கும். அதனருகில் எட்டு அடுக்குமால் ஒன்று கட்டும் திட்டத்தை விம்பிள்டன் கவுன்சில் கொண்டு வந்தது. விம்பிள்டன் முழுவதிலுமே கூட மூன்று மாடிக்கு மேல் எந்தக் கட்டடத்தையும் பார்க்க முடியாது. அந்த மால் தெற்கு விம்பிள்டனின் அமைதியை, அழகைக் கெடுத்துவிடும் என்றும் அந்தப் பகுதியில் டிராஃபிக்கை அதிகரித்துவிடும் என்றும் சர்ச்சை எழுந்தது. அந்தப் பகுதி மக்கள் சேர்ந்து ஒரு வாக்கெடுப்பை நடத்தினார்கள். அதில் பெரும்பாலோர் மால் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.
பின்னர் பாத்ஸ்பா எனும் ஊரில் வேலை செய்து வந்தேன். அங்கே என் அலுவலகம் போகும் தெருவில் இருந்த மரம் ஒன்று வேர் பரப்பியதில் அருகே இருந்த ஒரு மியூசியத்தில் அஸ்திவாரம் பாதிப்புக்குள்ளாக ஆரம்பித்தது. ஆகவே, அந்த மரத்தை வெட்டிவிட லோக்கல் கவுன்சில் முடிவெடுத்தது. அதற்கு ஒருமாதம் கழித்து ஒரு தேதி குறித்து, அந்தச் செய்தியை ஒரு போர்டில் அச்சடித்து அந்த மரத்தில் மாட்டிவிட்டார்கள். குறித்த தேதியில் அந்த மரம் வெட்டப்படும் என்றும், அதற்கு ஆட்சேபம் தெரிவிக்க விரும்புவோர் தொடர்புகொள்ளலாம் என்று ஒரு தொலைபேசி எண்ணும் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஒருவர் அந்த எண்ணுக்குத் தொடர்புகொண்டு அந்த மரத்தைத் தன் இல்லத்துத் தோட்டத்தில் தன் செலவிலேயே நட்டுக்கொள்வதாகக் கூறிவிடவே, வெட்டும் திட்டம் கைவிடப்பட்டது. மரத்தைப் பெயர்ப்பதற்கு ஒரு குறிப்பிட்ட நாள் ஒதுக்கப்பட்டது. அன்று பந்தல் போட்டு கேக், ஷாம்பேன் எல்லாம் போகிற வருகிறவர்களுக்குக் கொடுத்தார்கள் (நானும் போயிருந்தேன்). மரத்தைச்சுற்றி ஐந்து அடிக்கு வட்டமாக வெட்டி அதனை ஆக்டோபஸ் மாதிரி ஒரு இயந்திரத்தால் அப்படியே பெயர்த்து டிரக் ஒன்றில் படுக்கவைத்து விட்டார்கள்.பொதுமக்களின் பலத்த கரவொலியோடு அந்த மரம் தன் புதிய வீட்டை நோக்கிப் பயணித்தது.
**திட்டங்களின் சமூகத் தாக்கம்**
எட்டு வழிச் சாலை தேவையா, இல்லையா அல்லது அதற்கு ஆகும் பண விலை, சமூக விலை, சுற்றுச்சூழல் விலை இவையெல்லாம் அதனால் வரும் பலனுக்கு ஈடாகுமா என்பதெல்லாம் தனிக் கேள்விகள். நான் படித்துப் பார்த்தவரை அந்தப் பதில்கள் திருப்திகரமாக இல்லை. அரசின் Project Feasibility Report எனப்படும் தகவல் அறிக்கையேகூட முழுமையாக, ஆழ்ந்த ஆராய்ச்சியில் தயாரிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. பழைய வேறு ரிப்போர்ட்களில் இருந்து நிறைய பகுதிகள் ‘காபி – பேஸ்ட்’ செய்தது மாதிரிதான் இருக்கிறது.
காடுகள் அழிக்கப்படும், மலைகள் உடைக்கப்படும், விளைநிலங்கள் அழிபடும், ஏரிகள் மூடப்படும் ஒரு மாபெரும் புராஜக்ட் பற்றிய முழுமையான தகவலை மக்களுக்கு அளிக்க வேண்டியது ஒரு ஜனநாயக அரசின் கடமை. அந்த ரிப்போர்ட்டில் உள்ள குழப்பங்களுக்கான தெளிவுகளைக் கொடுக்க வேண்டியது அரசின் கடமை. நிலம் கையகப்படுத்தும் சட்டத்திலேயே இந்த மாதிரி திட்டங்களுக்கு Social Impact Assessment என்று ஒன்று நடத்த வேண்டும் என்று விதிமுறை இருக்கிறது. அதாவது இந்தத் திட்டத்தால் நிகழும் சமூகத் தாக்கம் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
நிலம் உள்ளவர்களுக்கு இழப்பீடு கிடைத்துவிடும். ஆனால், நிலம் அற்ற, அந்தப் பகுதிகளை நம்பி இருப்பவர்கள் பல்லாயிரக்கணக்கில் இருப்பார்கள். அவர்கள்தான் பெரும்பான்மை. அவர்கள் என்ன ஆவார்கள்? அவர்களின் வாழ்வாதாரத்துக்கு அரசிடம் உள்ள தீர்வு என்ன?அங்கே இருக்கும் வரலாற்றுச் சின்னங்கள், வழிபாட்டுத் தலங்கள் கதி என்ன? அங்கே உள்ள காடுகளை அண்டி வாழும் பழங்குடியினர் நிலை என்ன? அந்த Social Impact Assessment கேட்க வேண்டிய முக்கியமான கேள்விகள் இவை.
**எதைத் தகர்ப்பது, எதை விடுவது?**
ஓர் உதாரணத்துக்குப் பார்ப்போம். அந்த எட்டு வழிச் சாலை அண்ணாமலையார் கோயில்வழி அல்லது ரமணாசிரமம் வழி போக வேண்டும் என்று வரலாம். அப்போது அந்தக்கோயில் அல்லது ஆசிரமம் தகர்க்கப்பட வேண்டி இருக்கும். அப்படி நடப்பதற்கு நம்மில் யாராவது ஒப்புக் கொள்வோமா? வளர்ச்சித் திட்டத்துக்குத்தானே கோயிலைத் தாரை வார்க்கிறோம் என்று நாம் யோசிப்போமா? அது நடக்கவே நடக்காது இல்லையா? அந்தக் கோயிலை சுற்றிக்கொண்டு போகும்படிதான் சாலையைக் கட்டமைப்போம். இதேபோல அண்ணாமலையார் கோயிலை விடப் பழைமையான அல்லது உணர்வுபூர்வமான ஒரு வழிபாட்டுத்தலம் திட்டப் பகுதியில் வாழும் ஒரு பழங்குடியினருக்கு இருக்கக்கூடும். அந்தத் தலம் மட்டுமே அவர்கள் பின்பற்றும் மதத்தின் ஒரே திருத்தலமாக இருக்கலாம். அப்போது அது தகர்க்கப்படும் பட்சத்தில் அவர்களின் வாழ்வியலே உடைபடலாம்.
அதேபோல அந்தக் கிராமங்கள் அழிபடும்போது அங்கே உள்ள பல்லாயிரக்கணக்கான நிலமற்றோர் எங்கே குடிபெயருவார்கள்? அருகில் உள்ள நகரங்களுக்குப் போவார்கள். அப்போது அங்கே புதிய குப்பங்கள், பிளாட்பாரக் குடியிருப்புகள் உருவாகும். அவற்றின் பாதிப்பு அந்த நகரத்தில் எப்படி இருக்கும்? அதனால் அந்த நகரத்தின் நிர்வாகத்துக்கு ஆகும் செலவுகள், பாதிப்புகள் என்னென்ன? (இந்தச் செலவும் புராஜக்ட் திட்டச் செலவில் சேர்க்கப்பட வேண்டும்.) இதையெல்லாம் இந்த Impact Assessment ஆய்வு வெளிக்கொணர வேண்டும்.
**கேட்பாரற்ற உள்நாட்டு அகதிகள்**
சுதந்திர இந்தியா தொடங்கியதிலிருந்து அணைக்கட்டுகள், அரசுத் தொழிற்சாலைகள் போன்றவற்றுக்காக இடம் பெயர்க்கப்பட்டோர் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரண்டு கோடியைத் தாண்டும் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. இவர்கள் எங்கே உள்ளார்கள், என்ன செய்கிறார்கள், அவர்கள் மறுகுடியிருப்புக்கு நம் அரசுகள் செய்தது என்ன என்பதற்கான எந்தத்தகவலும் தெளிவாக இல்லை. ஒரு தேசத்திலிருந்து போர், கலவரம் காரணமாக வேறு தேசத்துக்குப் புகலிடம் தேடுவோருக்கு அகதிகள் என்று பெயர். நம் ஊரில் உள்தேசத்திலேயே இரண்டு கோடி அகதிகள் அட்ரஸ் இல்லாமல் உள்ளனர். வெளிதேசத்து அகதிகளுக்காக ஐநா சபை முதற்கொண்டு அம்னெஸ்டி இன்டர்நேஷனல் வரை வரிந்து கட்டிக்கொண்டு வருவதற்கு அமைப்புகள் உள்ளன. உள்நாட்டு அகதிகளுக்காக இந்த மாதிரி யாருமே இல்லை.
இந்தப் பிரச்சினைகளால்தான் முந்தைய மத்திய அரசு இந்த Social Impact Assessmentஐ முக்கிய தேவையாக வைத்து சட்டத்திருத்தம் செய்தது. புதிய பாஜக அரசு பதவி ஏற்றதும் முதல் வேலையாக இந்தச் சமூகத் தாக்க ஆய்வுத் தேவையை நிலக் கையகப்படுத்தும் சட்டத்திலிருந்து நீக்க முயன்றது. ஆனால், அதற்கு வந்த எதிர்ப்பாலும் மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாததாலும் அந்தச் சட்டத் திருத்தம் கைவிடப்பட்டது.
இந்தத் திட்டத்துக்கு வரும் எதிர்ப்புகளை இந்த அரசு அணுகும் விதமும் கவலையளிக்கிறது. சீனாவில் கட்டமைப்புத் திட்டங்களுக்கு வரும் எதிர்ப்புகளை அந்த அரசு கடுமையாக, இரும்புக்கரம் கொண்டு கையாள்கிறது. ஏனெனில் அது சீன அரசு; அங்கே ஜனநாயகம் எல்லாம் கிடையாது. ஆனால், நாம் வாழ்வது ஜனநாயக நாடு. இங்கே இந்த அரசு நடந்து கொள்ளும் விதத்தைப் பார்த்தால் திட்டம் பற்றிய விவாதம் என்று ஒன்று எழுவதையே இவர்கள் விரும்பவில்லை என்றே தோன்றுகிறது.
இத்திட்டம் நல்லதாக, பயனுள்ளதாகவேகூட இருக்கலாம். ஆனால், இது மக்கள்மேல் திணிக்கப்படக் கூடாது. ஒரு நல்ல ஜனநாயக அரசில் அரசே இதற்கு வரும் எதிர்வாதங்களுக்குத் தளம் அமைத்து அந்த விவாதம் ஆரோக்கியமாக நடைபெற உதவ வேண்டும். இந்தத் திட்டம் மக்களுக்காகவே என்றால், இந்தத் திட்டத்தில் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உள்ளாகாது என்றால், இதனால் இடம்பெயர்க்கப்படும் மக்களுக்குப் போதிய மறுவாழ்வாதாரம் அமைக்கும் திட்டம் அரசிடம் உள்ளது என்றால், அதனை மக்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும். அந்தப் பிரச்சாரம், மிரட்டல், கைதுகள் எல்லாம் இல்லாத ஓர் அமைதியான சூழலில் இடம்பெற வேண்டும். போராட்டம் செய்பவர்கள் எல்லாருமே சமூக விரோதிகள் என்ற பிம்பம் கட்டமைக்கப்படும் சூழலில் இந்த விவாதம் நடைபெறுவது ஆபத்தானது. அது இந்த அரசின் நோக்கத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது.
**முன்னுதாரணம் என்னும் ஆபத்தான வாதம்**
கடைசியாக, “இதுவரை போடப்பட்ட சாலைகள் எல்லாமே காடுகளை அழித்துப் போட்டதுதானே? சென்னையே முன்பு ஒரு காடாகத்தானே இருந்திருக்கும்? அதெல்லாம் ஓகே. ஆனால், பசுமை வழிச் சாலை மட்டும் கூடாதா?” … என்கிற மாதிரி வாதங்கள் நிறைய வருகின்றன.
பதில் இதுதான்: உலகம் ஆரம்பத்தில் முழுவதுமே காடாகத்தான் இருந்திருக்கிறது. நாம் பரிணாம வளர்ச்சி அடைந்ததிலிருந்து மானுட நாகரிகமே காடுகளின் சமாதிகளில்தான் கட்டமைக்கப்பட்டிருந்தது. அதற்குக் காரணம், சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றியோ, காடுகளின் முக்கியத்துவம் பற்றியோ, உணவு மற்றும் உயிரினச் சங்கிலிகள் பற்றியோ எந்த விழிப்புணர்வும் நமக்கு அப்போது இருக்கவில்லை. இன்று நாம் புரிந்துவைத்திருக்கும் சூழலியல் (Environmentalism) பற்றிய சிந்தனாவாதங்களே எழுபதுகளில்தான் உருப்பெற ஆரம்பித்தன. அதுபின்னர் அறிவியல்பூர்வமாக நிரூபணம் ஆகி, புதிய நூற்றாண்டில் அரசுகளால் தீவிரமாக நடைமுறையில் பின்பற்றத் தொடங்கப்பட்டிருக்கின்றன. பருவநிலை மாற்றம் எனப்படும் பூமி வெப்பமயமாவதின் ஆபத்து எல்லாருக்கும் இப்போது தெரிந்துவிட்டது.
டொனால்டு ட்ரம்ப் மாதிரி ஓரிரு பிடிவாதத் தலைவர்கள் தவிர மற்ற உலக அரசியல்வாதிகள் அனைவருமே இப்போது இதனைப் புரிந்துகொண்டு விட்டார்கள் .இதனால்தான் உலக அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குத் தேசத்துக்கு தேசம் தனித்தனியாக இலக்குவைத்து அமைந்த பாரிஸ் ஒப்பந்தத்தில் இந்தியாவும் கையெழுத்திட்டிருக்கிறது. அமெரிக்காவே இதிலிருந்து விலகிய பின்னரும்கூட “இந்தியா தன் இலக்கை நோக்கிப் பயணிக்கும்” என்று பிரதமர் மோடி உறுதியளித்து அப்போதே உடனடியாக அறிக்கை வெளியிட்டார்.
எனவே, அப்போது செய்தோமே, இப்போது செய்யக் கூடாதா என்பதே அர்த்தமற்ற கேள்வி. அப்போது மாறிமாறிப் போர்கள் தொடுத்துக்கொண்டிருந்தோம், பெண்களை வீட்டுக்குள் பூட்டி வைத்திருந்தோம், சில சாதியினரை ஊரைவிட்டு விலக்கி வைத்திருந்தோம். இவையெல்லாம் அசிங்கம் என்றுபுரிந்து கொண்டு மாற முயற்சி செய்வது மாதிரி இதையும் புரிந்துகொள்ள வேண்டும். சுற்றுச்சூழலுக்கும் பொதுமக்களுக்கும் பெரிய அளவில் பாதிப்பு இல்லாத வகையில் வளர்ச்சிகள் கொண்டுவர வேண்டும் என்பது புதிய உலகத்தின் புதிய விதிமுறைகள். அதிலும் இந்தப் பருவ நிலை மாற்றம் பெரிதும் பாதிப்பது இந்தியா மாதிரி வளரும் நாடுகளைத்தான். 2015இல் நடந்த சென்னை வெள்ளம்கூடச் சுற்றுச்சூழல் பாதிப்பின் விளைவுதான்.
சரி, அப்படி என்றால் எப்படித்தான் வளர்ச்சி, முன்னேற்றம் எல்லாம் காண்பது என்ற கேள்விவரும். அதற்குப் பதில்: சுற்றுச்சூழலைப் பாதிக்காமல், அல்லது மிகச்சிறிய அளவிலான பாதிப்புகளை மட்டுமே வைத்து வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தும் தொழில்நுட்பங்கள், வழிமுறைகள் வந்துகொண்டிருக்கின்றன. அவற்றை வளங்குன்றா வளர்ச்சி (Sustainable Development) என்று அழைக்கிறார்கள். இந்தத் தொழில்நுட்பங்கள் உலகெங்கும் கிடைக்கின்றன. இதில் தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன. நாம் கொஞ்சம் முயன்றாலே இவற்றைப் பின்பற்றிக் கட்டமைப்புகளைச் செயலாக்க முடியும்.
ஆனால், இந்த மாதிரி எல்லாம் செய்வதற்கு சமூக அக்கறை, பன்னாட்டு வளர்ச்சித் திட்டங்கள் பற்றிய அறிவு, ஜனநாயக முதிர்ச்சி இவையெல்லாம் தேவைப்படும். “இதுவே என் கட்டளை, என் கட்டளையே சாசனம்!” என்கிற சிந்தனாவாதத்தில் தலைவர்கள் உழலும் நிலையில் இவையெல்லாம் சாத்தியப்படாது.
(கட்டுரையாளர் குறிப்பு: ஸ்ரீதர் சுப்ரமணியம் கடந்த பதினைந்து ஆண்டுகளாக ஆங்கிலத்தில் வலை பதிவு எழுதிவருகிறார். கடந்த ஐந்தாண்டுகளாகத் தமிழிலும் தன் சிந்தனைகளைப் பகிர்ந்துவருகிறார். கருத்துச் சுதந்திரம், பெண்ணியம், வரலாறு, அரசியல், மதவாதம் உள்ளிட்ட சமூகப் பிரச்சினைகளில் அழுத்தமான தர்க்கரீதியான கருத்துகளை முன்வைக்கிறார். அவருடைய முக்கியக் கட்டுரைகள் ‘ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்’ எனும் தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. ஸ்ரீதர் சென்னையில் கணிதத்தில் பட்டம், மென்பொருள் துறையில் மற்றும் இதழியலில் என்று இரண்டு டிப்ளோமாக்கள் மற்றும் இங்கிலாந்தில் ஆங்கிலம் மற்றும் இலக்கிய ஆய்வில் முதுகலைப் பட்டமும் பெற்றிருப்பவர். டெல்லியில் மென்பொருள் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்கிறார். இவரைத் தொடர்புகொள்ள: sridharfc@gmail.com)�,”