கூவத்தூர் ரகசியத்தைச் சொன்னால்தான் தமிழ்நாட்டுக்கு விடிவுகாலம் பிறக்கும் என்றால் அதனைச் சொல்லவும் தயங்க மாட்டேன் என்று சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து சட்டமன்றத்தை புறக்கணிப்பதாகத் தெரிவித்த திமுக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாதிரி சட்டமன்றத்தை நடத்தியது. இக்கூட்டத்தில் திமுக, காங்கிரஸ் உறுப்பினர்களோடு சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றிபெற்ற கருணாஸும் கலந்து கொண்டார்.
மாதிரி சட்டமன்றக் கூட்டத்தில் பேசிய கருணாஸ், கூவத்தூரிலே நான் பட்ட அவமானங்களைத் தாண்டி நான் எதுவும் அவமானப்படப் போவதில்லை” என்று பேசினார். அவரிடம் மாதிரி சட்டப்பேரவையின் சபாநாயகர், கூவத்தூர் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்களேன் என்று கேட்க, அதற்கு, “அதனைச் சொன்னால்தான் தமிழர்களுக்கு ஒரு விடிவுகாலம் வரும் என்றால் அதனைக் கூறவும் தயங்க மாட்டேன்” என்று கருணாஸ் தெரிவித்தார்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், “கூவத்தூரில் நடந்தது அனைத்தும் எனக்குத் தெரியும். அதனை சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்வேன். ஒரு சின்ன விஷயத்தைப் பெற வேண்டுமானாலும் இறந்துதான் பெற வேண்டிய நிலையில் மக்கள் உள்ளனர். போராடும் மக்களை குருவியை சுடுவது போல சுட்டுக்கொல்லும் அரசு முழுக்க முழுக்க மக்களுக்கு எதிரானதுதான்” என்று தெரிவித்த அவர், “தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து நான் அரசினை குற்றம் சாட்டிப் பேசியதால் எனக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை முதல்வர் விலக்கிக்கொண்டுள்ளார். என்னைப் போன்றோருக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பில் கூட தலையிடத் தெரிந்த முதல்வருக்குத் தெரியாமலா தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றிருக்கும்” என்று சந்தேகமும் எழுப்பினார்.
தினகரனை சட்டமன்றத்தில் ஆளுங்கட்சியினர் விமர்சனம் செய்தது குறித்துப் பேசிய கருணாஸ், “இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றிருந்தாலும், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் பேசும்போது ஆளுங்கட்சி அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஒருமையில் பேசுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். நாளைக்கு இதே நிலைமைதானே எனக்கும் வரும்” என்றும் குறிப்பிட்டார்.�,”