சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அலுவலக உதவியாளர்கள், நூலக உதவியாளர்கள் தேர்வில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ஒரு சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரிய மனுவுக்கு தமிழ்நாடு அரசும், உயர் நீதிமன்ற தலைமை பதிவாளரும் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த, மூன்றாம் பாலினத்தவரான கிரேஸ் பானு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழ்நாட்டில் 30 ஆயிரம் மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவரையும் சமூகத்தில் பங்கேற்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கடந்த 2019ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மூன்றாம் பாலினத்தவர்கள் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின்படி, கல்வி மற்றும் வேலை வாய்ப்பில், ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.
உயர் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர்கள், நூலக உதவியாளர் என, பல்வேறு காலியிடங்களை நிரப்ப, 2021 மார்ச்சில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், மூன்றாம் பாலினத்தவருக்கான ஒதுக்கீடு பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. கல்வி தகுதி பெற்ற பலர், எங்களில் உள்ளனர்.எனவே, மூன்றாம் பாலினத்தவருக்கு ஒரு சதவீதம் இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த மனு நேற்று(அக்டோபர் 23) தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவுக்கு தமிழ்நாடு அரசும், உயர் நீதிமன்ற பதிவாளரும் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு, வழக்கை அக்டோபர் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தினர் நீதிபதிகள்.
**வினிதா**
�,