இந்தியாவின் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் தொடக்க வீரராக களம் இறங்கும் ரோகித் சர்மாவிற்கு டெஸ்ட் போட்டிகளில் சரியான இடம் கிடைப்பதில்லை.
கடந்த வருடம் நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடரின் கடைசி போட்டியின்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் லண்டன் சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர், தற்போது பெங்களூரில் உள்ள இந்திய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி எடுத்து வருகிறார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில் ‘‘ஆஸ்திரேலியா தொடரில் அணிக்கு திரும்புவதற்காக முயற்சி மேற்கொண்டுள்ளேன். இந்தத் தொடரை நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருக்கிறேன். எல்லோரும் எனக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், தற்போதைய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே, ஒரு வீரர் காயத்தால் அணியில் இருந்து விலகினால், அதன்பின் உள்ளூர் போட்டிகளில் விளையாடி உடற்தகுதியை நிரூபித்தால்தான் தேசிய அணிக்கு தேர்வு செய்யப்படுவார் என்ற கொள்கை உடையவர். யுவராஜ் சிங்கும் உள்ளூர் போட்டிகளில் விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்த பின்னரே அணிக்குத் திரும்பி சிறப்பாக ஆடி வருகிறார். இதனால் ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.�,