விடுபட்ட பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் தேதி அறிவிப்பு!

politics

நகர்ப்புற மறைமுகத் தேர்தலின்போது பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கபட்ட பதவிகளுக்கான தேர்தல் வரும் 26ஆம் தேதி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,838 பதவிகளுக்கு கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 22ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து மார்ச் 2ஆம் தேதி வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும் பதவியேற்றுக் கொண்டனர். இதையடுத்து மார்ச் 4ஆம் தேதி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலின்போது கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பெரும்பாலான இடங்களில் திமுக வேட்பாளர்கள் தாங்களாகவே போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இது திமுக உட்பட கூட்டணி கட்சியினரையே அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அவசர ஆலோசனை நடத்தி, கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அனைவரும் தங்கள் பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். இதை ஏற்று பலரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
இந்த நிலையில், மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர் மறைமுகத் தேர்தலை வரும் 26ஆம் தேதி நடத்திட உள்ளதாக ஏற்கெனவே ஆணையத்தால் தெரிவித்ததைத் தொடர்ந்து ஆடுதுறை பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் கூட்டம் வரும் 26ஆம் தேதி நடத்திட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து மார்ச் 4ஆம் தேதி நடைபெற்ற சாதாரண மறைமுகத் தேர்தலின்போது பல்வேறு காரணங்களால் தேர்தல் நடைபெறாமல் காலியாக உள்ள 62 பதவியிடங்களுக்கான வரும் மார்ச் 26ஆம் தேதி மறைமுகத் தேர்தல் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நகராட்சி, பேரூராட்சித் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் கூட்டம் காலை 9.30 மணிக்கும், நகராட்சி, பேரூராட்சி துணைத் தலைவர்களை தேந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் கூட்டம் மதியம் 2.30 மணிக்கும் தொடர்புடைய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்களில் நடைபெறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**வினிதா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *