உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அனுப்பிய கடிதத்தை எடப்பாடி பழனிசாமி வாங்க மறுத்துள்ளார்.
அதிமுகவுக்குள் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ள நிலையில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று கடிதம் எழுதினார். தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜூலை 9ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.
அதில், பெறுநர், இணை ஒருங்கிணைப்பாளர், அதிமுக என்று குறிப்பிட்டு, ” உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவியிடங்களை நிரப்புவதற்கான தற்செயல் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட ஏதுவாக படிவம் ஏ மற்றும் படிவம் பி ஆகியவற்றை எனக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த கடிதம் கட்சியின் மேலாளர் மகாலிங்கம் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளரும் எம்எல்ஏவுமான மனோஜ் பாண்டியன் கூறுகையில், உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்குச் சின்னம் ஒதுக்கக் கையெழுத்துப் போட நான் தயார் என்றும் நீங்கள் தயாராக இருந்தால் அதில் கையெழுத்திட்டு உடனே அனுப்புமாறு எடப்பாடி பழனிசாமிக்குப் பன்னீர்செல்வம் கடிதம் எழுதினார். அதில் இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிட எனக்குச் சம்மதம் என்றும் ஓபிஎஸ் தெரிவித்திருந்தார் என்று கூறினார்.
இந்த சூழலில் பன்னீர்செல்வம் அனுப்பிய கடிதத்தை எடப்பாடி பழனிசாமி வாங்காமல் நிராகரித்ததாகவும், இதனால் அக்கடிதம் மீண்டும் பன்னீர் செல்வத்திடமே ஒப்படைக்கப்பட்டதாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
**-பிரியா**