சசிகலாவை எடப்பாடி பழனிசாமி எதிர்த்ததே பன்னீர்செல்வத்தால்தான் என்று முன்னாள் அமைச்சரும் அதிமுக ஜெ. பேரவை செயலாளருமான ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இன்று (ஜூன் 26) மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய உதயகுமார்,
“அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தபோது அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் விதித்த நிபந்தனைகள் என்ன தெரியுமா? அம்மாவின் மரணத்தில் இருக்கும் மர்மத்தை களைய விசாரணை நடத்த வேண்டும், அம்மாவின் வீட்டை நினைவு இல்லமாக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் சின்னம்மாவையோ அவரது குடும்பத்தினரையோ கட்சியில் மீண்டும் சேர்க்கக் கூடாது என்பதுதான் அண்ணன் ஓபிஎஸ் விதித்த நிபந்தனைகள்.
இந்த மூன்று நிபந்தனைகளையும் எடப்பாடி அண்ணன் நிறைவேற்றித் தந்தார். அம்மாவின் மரணம் பற்றி விசாரணை கமிஷனை அரசு சார்பில் அமைத்தார்கள். அதோடு அம்மா வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக்கினார். அதோடு அவர்களோடு (சசிகலா) ஒட்டுமில்லை உறவுமில்லை என்று இவர் வைத்த நிபந்தனையின் பேரில்தான் அவர் அறிவித்தாரே தவிர, எடப்பாடி தனிப்பட்ட முறையிலே அறிவிக்கவில்லை. தன்னை இயக்கத்தில் சேர்ப்பதற்காக, அவர்களை சேர்க்கக் கூடாது என்ற நிபந்தனையை விதித்தார். இதுதான் உண்மையான நிலவரம். அதிமுகவில் முதன் முதலாக பிளவுக்கு பிள்ளையார் சுழி போட்டது யார்? அன்று ஓபிஎஸ் தொடங்கிவைத்த பஞ்சாயத்துதான் இன்றுவரை தொடர்கிறது” என்று கூறிய உதயகுமார் தொடர்ந்து,
“இத்தனை நிபந்தனைகள் விதித்துவிட்டு பின் ஏன் டிடிவி தினகரனோடு ரகசியமாக பேசினார்? ஒரு தலைமை எடுத்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும். சந்தேகத்துக்கிடமின்றி இருக்க வேண்டும். சந்தேகத்துக்குரிய தலைமையை நாங்கள் விரும்பவில்லை. சந்தேகத்துக்கிடமில்லாத நம்பிக்கை பெற்ற தலைமையைதான் தொண்டர்கள் விரும்புகிறார்கள்.
எத்தனை முறை மூத்த தலைவர்கள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம் தெரியுமா? அவர் அறிவார். நானே பல முறை அவரிடம் சென்று பேசினேன். அவர் பேச்சு வார்த்தைக்கே வர மறுக்கிறார். ஆனால் ஊடகங்களில் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று அறிவித்து அனுதாபம் தேடுகிறார்” என்றும் பன்னீர் மீது குற்றம் சாட்டினார் உதயகுமார்.
-**வேந்தன்**