விழுப்புரம் மண்டலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொண்டதைத் தொடர்ந்து, ஒரே நாளில் 4 துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் பிற மாவட்டங்களுக்குச் சென்று வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். கடந்த 26 மற்றும் 27 ஆகிய இரண்டு நாட்கள், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், உயரதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினர்.
முதல்வரின் கள ஆய்வைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் 4 துறை அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து இன்று (ஏப்ரல் 30) தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் மூலமாக ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த் துறை, காவல் துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறையில் சில பணியிட மாற்றம் செய்து கீழ்க்காணுமாறு ஆணையிடப்பட்டுள்ளது.
இந்த பணியிட மாற்றம் விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சரின் ஆய்விற்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட பணியிட மாற்றமாக அறிய வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குநர் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக எஸ்.செல்வராணி நியமிக்கப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகவன் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக ராஜசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜி.சரஸ்வதி மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக கோ.கிருஷ்ணப்பிரியா பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் நகர காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபனும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியா
துணை முதல்வர் ஆகிறேனா?: உதயநிதி பதில்!
தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் : வெல்லப்போவது யார்?