மணிப்பூர் கலவரம் குறித்த உண்மையை கண்டறிய அனைத்து கட்சிக் குழுவை அமைத்து அங்கு அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதாக திருச்சி சிவா எம்.பி. தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பைரன் சிங் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடத்தி வரும் நிலையில், அங்கு கடந்த மாதம் இரு பிரிவுகளைச் சேர்ந்த மக்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது.
மோதல் தொடர்ந்து அதிகரித்ததை தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கலவரம் வெடித்தது. இதில் இதுவரை 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், மணிப்பூர் கலவரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் தொடர் கோரிக்கையை ஏற்று, டெல்லியில் உள்ள பழைய பாராளுமன்ற கட்டிடத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று (ஜூன் 24) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை தாங்கினார். தமிழ்நாட்டில் இருந்து தி.மு.க . சார்பில் எம்.பி திருச்சி சிவா, அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிலையில் கூட்டம் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து எம்.பி. திருச்சி சிவா செய்தியாளர்களை சந்தித்தார்.
வாய் திறக்காத பிரதமர் மோடி
அவர் பேசுகையில், “கூட்டத்தில் 10 கட்சிகள் கொண்ட தலைவர்களின் அமைப்பு மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமருக்கு அறிக்கை கொடுத்தனர்.
அதில், மணிப்பூர் கலவரத்தில் இதுவரை 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகளும், சர்ச், மசூதிகளும் தீக்கிரையாக்கப்பட்டன.
இதனால் சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் 349 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மனதை உலுக்கும் இந்த நடவடிக்கையில் இதுவரை ஒரு வார்த்தைக்கூட பேசாத பிரதமர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது” என்றார்.
பாஜக அரசின் தோல்வி
மேலும் அவர், “நாட்டின் வடகிழக்கில் மணிப்பூர் இருந்தாலும், அங்கு ஏற்பட்டிருக்கும் கலவரம் தென்கோடியில் இருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு வேதனை அளிக்கிறது.
மணிப்பூர் கலவரம் குறித்து தமிழ்நாட்டின் முதல்வர் வருத்தம் தெரிவித்துள்ளார். ஆனால் 50 நாட்களாக தொடர்ந்து வரும் கலவரத்தை கட்டுப்படுத்தி மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுவது குறித்து பிரதமர் மோடி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காதது வருத்தம் அளிக்கிறது.
இன்று நடைபெற்ற கூட்டத்தில், மணிப்பூரில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து கேட்டதோடு, அங்கு நடந்த உண்மையை கண்டறிய அனைத்துக் கட்சிக் குழுவை அமைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட்து.
கூட்டத்தில் இது காவல்துறையின் தோல்வியோ அல்லது ராணுவத்தின் தோல்வியோ அல்ல. இது அங்கு ஆளும் பாஜக அரசு நிர்வாகத்தின் தோல்வி.
மத்திய மாநில அரசுகள் ஒண்றிணந்து செயல்படாததே காரணம்” என்று எனது கருத்தை கூறினேன். மேலும் அங்கு அரிசி அதிக விலைக்கு விற்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பினேன்.
அதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, கடைகளில் தான் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும், முகாம்களில் இருப்பவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார் என்றார்.
கிறிஸ்டோபர் ஜெமா
அதிகரிக்கும் போதை பழக்கம்: ஜஸ்வர்யா ராஜேஷ் வேண்டுகோள்!
மின்கட்டண உயர்வு…வீடுகளுக்கு பொருந்தாது!