உத்தரகாண்ட் சில்க்யாரா சுரங்கப்பாதை விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணியானது 17-வது நாளாக இன்று (நவம்பர் 28) தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
உத்தரகாண்ட் மாநிலம் சில்க்யாரா சுரங்கப்பாதையில் கடந்த நவம்பர் 12-ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் 41 தொழிலாளர்கள் சுரங்கத்தில் சிக்கினர். அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர், மாநில பேரிடர், சுரங்க வல்லுநர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
தொழிலாளர்களை சுரங்கத்திலிருந்து மீட்க ஆகர் என்ற அமெரிக்க இயந்திரம் மூலம் துளையிடும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்தசூழலில் நவம்பர் 25-ஆம் தேதி ஆகர் இயந்திரம் உடைந்தது. இதனால் மீட்பு குழுவினர் தொழிலாளர்களை மீட்க மாற்று வழியை தேடினர். அதன்படி சுரங்கப்பாதையில் செங்குத்தாக துளையிடும் பணியில் ஈடுபட்டனர். மொத்தமுள்ள 86 மீட்டரில் இதுவரை 36 மீட்டர் தூரம் செங்குத்தாக துளையிடப்பட்டுள்ளது.
ஆகர் இயந்திரம் உடைந்ததால் கிடைமட்டமாக துளையிடும் பணியை சுரங்க நிபுணர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இன்னும் 5 முதல் 6 மீட்டர் தூரம் வரை மட்டுமே கிடைமட்டமாக துளையிட வேண்டும் என்பதால் மீட்பு படையினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
இதுகுறித்து சுரங்க நிபுணர் கிறிஸ் கூப்பர் கூறும்போது, “இன்று மட்டும் கிடைமட்டமாக மூன்று மீட்டர் தூரம் துளையிட்டுள்ளோம். தொழிலாளர்கள் சிக்கியிருக்கும் இடத்தை அடைய 57 மீட்டர் தூரம் துளையிட வேண்டியுள்ள நிலையில் இதுவரை 50 மீட்டர் துளையிட்டுள்ளோம்.
பின்னர் தொழிலாளர்களை மீட்க சுரங்கப்பாதையின் உள்ளே குழாய் பதிக்க வேண்டும். நேற்று இரவு எந்தவித இடையூறுமின்றி வேகமாக பணி நடந்தது. தொழிலாளர்களை விரைவில் மீட்போம் என்ற நம்பிக்கை உள்ளது” என தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கலைஞர் விழாவை வேறு தேதிக்கு மாற்ற ஓபிஎஸ் வலியுறுத்தல்!
கற்றல்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு அமேசானில் வேலை!