தசாவதாரம் 2: கே.எஸ்.ரவிகுமார் சொன்ன தகவல்!

entertainment

தசாவாதாரம் படத்தின் 2ஆம் பாகம் வருமா, வராதா… என்ற கேள்விக்கு இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் பதிலளித்துள்ளார்.

கூகுள் குட்டப்பா படத்தின் தயாரிப்பாளரும் அதன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தவருமான கே.எஸ்.ரவிகுமார், அந்தப் படத்தின் நாயகன் தர்ஷன், நாயகி லாஸ்லியா ஆகியோருடன் சென்னை, திருப்போரூரில் உள்ள எஸ்.எஸ்.என். கல்லூரியின் கலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

‘கூகுள் குட்டப்பா’ மிக விரைவில் ஆஹா ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆக உள்ள நிலையில், கல்லூரி நிர்வாகத்துடன் சேர்ந்து ஆஹா ஓடிடி தளம் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், “உங்கள் ஆரவாரத்தைப் பார்க்கும்போது எனக்கு என் கல்லூரி காலங்கள்தான் நினைவுக்கு வருகின்றன. அப்போதெல்லாம் என் கல்லூரியின் அனைத்து கலை நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு பாலையா உட்பட பல நடிகர்களின் குரலில் மிமிக்ரி செய்வேன். சிதம்பரம் ஜெயராமன் குரலில் பாடுவேன். ஆனால், உங்களைப் போல் இவ்வளவு சத்தமாக விசில் அடிக்க மட்டும் கற்றுக்கொள்ளவில்லை.

எனக்கு விசில் அடிக்கும்போது வெறும் சத்தம் மட்டும்தான் வரும். ஆனால் நடிகை குஷ்பூ எங்களோடு இங்கு வந்திருந்தால் உங்களைவிட சிறப்பாக விசில் அடிப்பார். படத்தில் நான் விசில் அடிக்கும்படியாகக் காட்சி வந்தால் நான் வெறுமனே வாயை மட்டும் அசைக்க, எனக்காக அவர்தான் விசில் அடிப்பார்” என்றார்.

அடுத்து மாணவ, மாணவியர் கேட்ட சில கேள்விகளுக்கு பதிலளித்த அவர், கமலுடன் ‘தசாவதாரம்’ படத்தில் நடந்த சில அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

“கமல் எப்போதும் கடினமான உழைப்பை நம்பக் கூடியவர். NO PAIN NO GAIN என்பதுதான் அவரது பாலிசி. ‘தசாவதாரம்’ படத்துக்கும் அப்படித்தான் உழைத்தார். சில தினங்களுக்கு முன் ‘தசாவதாரம் ரிலீஸாகி 12 வருஷம் ஆச்சா?’ என்று ஆச்சரியத்துடன் 2 மணி நேரம் பேசினார். சில வருடங்களாகவே கமலையும் என்னையும் பார்த்து ‘தசாவதாரம் 2’ எப்போது என்று கேட்கிறார்கள். ஆனால், எங்கள் இருவருக்கும் எத்தனை கோடிகள் கொட்டிக் கொடுத்தாலும் ‘தசாவதாரம்’ போன்ற இன்னொரு படத்தை உருவாக்கவே முடியாது. எனவே ‘தசாவதாரம் 2’க்கு வாய்ப்பே இல்லை” என்றார்.

**-இராமானுஜம்**

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *