சென்னை விரைவில் பழைய நிலைக்கு மீண்டு வரும் என்று நடிகர் விவேக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் தலைநகர் சென்னையில்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது. நாளுக்கு நாள் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள நான்கு மாவட்டங்களுக்கு வரும் ஜூன் 19ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி, வேலை என்று எதிர்கால கனவுகளுடன் வாழ்க்கை தேடி சென்னைக்கு வந்த பலரும் கொரோனா அச்சம் காரணமாக சென்னையை காலி செய்து விட்டு மீண்டும் சொந்த ஊருக்குத் திரும்புகின்றனர். கொரோனா பிரச்சினைகள் எப்போது முடிவுக்கு வரும், மீண்டும் சென்னை எப்போது இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று பலரும் சிந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில் விரைவில் சென்னை மீண்டு வரும் என்று நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில், **“எல்லோரும் கழிவிரக்கம், அச்சமுடன் சென்னையைப் பார்க்கிறார்கள். பரவல் அதிகமாக காரணம் இங்கு அதிக மக்கள் குறைந்த இடத்தில் நெருங்கி வாழ்கின்றனர். தலைநகர்! பல மொழி, இனத்தோர் கலந்து உள்ளனர். தன்னை வளர்த்தவனுக்கு இளநீர் கொடுப்பது தென்னை. இந்த மண்ணை மிதித்தவனை கைவிடாது சென்னை. அது மீளும், வாழும்.”** என்று அவர் பதிவிட்டுள்ளார்.
பாலித்தீன் பைகளுக்கு மாற்றாக, கடைகளில் வாழையிலை பயன்படுத்துவது குறித்து ரசிகர் ஒருவர் கருத்து கேட்டதற்கு, **“கொரோனா தாக்கம் குறைந்ததும் நாம் செய்ய வேண்டியது: நம் பாரம்பரியத்தைக் காப்பது, இயற்கையைப் போற்றுவது, நீர் மேலாண்மை, இயற்கை விவசாயம் மீட்பது, சித்த வைத்தியத்தை நம் வாழ்வில் மீண்டும் சேர்ப்பது! இதற்கு, நம் கிராம, நகர இளையோர் (அரசியல் மத இன பாகுபாடு இன்றி) இணைதல் வேண்டும்.”** என்று விவேக் பதிலளித்துள்ளார்.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**
�,”