ஹீரோ சினிமாஸ் தயாரிப்பில் சி.மணிகண்டன் கதிரவன் கதாநாயகனாக நடிக்கும் படம் மீண்டும். இப்படத்தை கதை திரைக்கதை வசனம் எழுதி சரவணன் சுப்பையா இயக்கி உள்ளார். இவர் அஜித்குமார் நடித்த சிட்டிசன் படத்தை இயக்கியவர்.
‘மீண்டும்’ படத்தில் கதிரவன் ஜோடியாக அனகா நடித்திருக்கிறார். இவர் டிக்கிலோனா, நட்பே துணை படங்களில் நடித்தவர். பிரணவ் ராயன், அனுராதா, துரை சுதாகர், சுபா பாண்டியன், அபிதா செட்டி, யார் கண்ணன், எஸ்.எஸ்.ஸ்டான்லி, சுப்ரமணியம் சிவா, தர்ஷினி, இந்துமதி, மணிகண்டன், கேபிள் சங்கர், ஆதர்ஷ், மோனிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுதி உள்ளார். நரேன் பாலகுமாரன் இசை அமைத்திருக்கிறார். சீனிவாசன் தேவாம்சம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜா முகமது எடிட்டிங் செய்திருக்கிறார்.
இரண்டு தந்தை, ஒரு பெண், ஒரு குழந்தை என்ற மாறுபட்ட கதை அம்சமுள்ள இப்படத்தில் கடற்படையினரிடம் சிக்கி தமிழ் மீனவர்கள் படும் சித்திரவதையை தத்ரூபமாக்கி படமாக்கி உள்ளனர். இந்தியா மீது மறைமுக தாக்குதல் நடத்தும் இலங்கை, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் விஞ்ஞான ரீதியான தாக்குதலையும் இப்படத்தில் சொல்லியிருக்கிறோம் என்கிறார் இயக்குனர் சரவண சுப்பைய்யா.
மீண்டும் படத்தின் டிரைலர் வெளியீடு மற்றும் பாடல்கள் முன்னோட்டம் சென்னை பிரசாத் லேபில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் லியோனி, பேச்சாளர் நாஞ்சில் சம்பத், பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே, திரைப்பட இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், பேரரசு முன்னிலை வகித்து படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டனர்.
விழாவில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசுகையில், “மீண்டும் சரவணன் சுப்பையா. திறமையுள்ளவர்கள் எல்லாம் ஏன் நடுவில் கொஞ்சம் சினிமாவை விட்டு ஒதுங்கிட்டீங்களா? சினிமா ஒதுக்கி விட்டதா? என்று தெரியவில்லை. சரவண சுப்பையா இயக்கிய சிட்டிசன் படம் யாரும் நினைத்துப்பார்க்க முடியாத விஷயங்களை பேசியது. சினிமா பொழுது போக்காக எடுக்கிறோம். அதில் சில நல்ல விஷயங்களை சொல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு சிலர்தான். சிட்டிசன் படத்தில் தனது திறமையை நிரூபித்தவர் இயக்குனர் சரவண சுப்பையா. 70, 80களில் வெற்றியும் கொடுப்போம், தோல்வியும் கொடுப்போம் ஆனால் வெற்றியை மட்டும் மனதில் வைத்துக் கொள்வார்கள். வாய்ப்புகள் தொடர்ந்து வரும். இப்போது ஒவ்வொரு படமும் சோதனையானது. ஒரு படம் சறுக்கினாலும் அவ்வளவுதான் நம்மை மறந்துவிடுவார்கள். சரவணன் சுப்பையா மீண்டும் படம் மூலம் மீண்டும் வந்திருக்கிறார். சிட்டிசன் இயக்குனராக மீண்டும் உங்களை கொண்டு வந்து நிறுத்தும் படத்தின் டிரைலர் ரொம்ப நன்றாக இருந்தது. படத்தில் ஹீரோவை கொடுமைபடுத்தும் காட்சியும் இருக்கிறது. ஒரு குழந்தையை வைத்து சென்டிமென்ட் காட்சியும் இருக்கிறது. ஹீரோ கதிரவன் மிகவும் கடுமையாக உழைத்திருக்கிறார். நன்றாக உழைப்பவனை சினிமா விடாது. சினிமாவை காதலித்தால் உண்மையான காதலிபோல் அது நம்மை கைவிடாது. ஏதாவது ஒருவிதத்தில் நம்மை பிடித்து இழுத்துக்கொண்டே இருக்கும்.
இங்கு லியோனி வந்திருக்கிறார். முதன்முறையாக அவரை நான் சினிமாவுக்கு அழைத்து வந்தேன். செந்தூரப்பாண்டி படத்தின் நூறாவது நாள் விழாவுக்கு காதலா வீரமா என்ற தலைப்பை வைத்து பட்டிமன்றம் நடத்திக்கொடுத்தார். அதேபோல் நாஞ்சில் சம்பத் இங்கு வந்திருக்கிறார். அவர் இருக்கும் மேடையில் நீ எப்படி தைரியமா பேசுற என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ளவேண்டி உள்ளது. அடுத்து பாண்டே வந்திருக்கிறார். திறமையானவர் ஆனால் வழிதவறி எங்கேயோபோய்கொண்டிருக்கிறாரோ என்று நினைக்கிறேன். இவர் தமிழகத்துக்கு தமிழர்களுக்கு உறுதுணையாக இருந்தால் நல்லது” என்றார்.
**இராமானுஜம்**
�,