தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கர்ப்பிணி தாய்மார்கள், வயது முதியவர்கள், இணை நோய் உள்ளவர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் மருத்துவ முகாம்கள் மற்றும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார்.
இந்த ஆய்விற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் டிசம்பர் 17 முதல் 21 வரை 190 நடமாடும் மருத்துவ குழுக்கள் வாயிலாக மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது.
இதுவரை 2,082 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளது. 66,756 பேர் சிகிச்சை பெற்றுள்ளார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பெரிய மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது.
நான்கு மாவட்ட மக்களும் ஒரு சில வாரங்களுக்கு காய்ச்சிய குடிநீரை பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் டையேரியா போன்ற மழைக்கால நோய் பாதிப்புகள் ஏற்படும்.
தற்போது, சிங்கப்பூரில் 4,000 பேருக்கும், கேரளாவில் 300 பேருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். சிங்கப்பூர் மருத்துவர்களுடன் தொடர்பு கொண்டு பேசினோம்.
கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் 4 நாட்களில் டிஸ்சார்ஜ் ஆகிறார்கள். பெரும்பாலானவர்களுக்கு தொண்டை வலி, இருமல் பாதிப்பு உள்ளது என்று தெரிவித்தார்கள்.
கடந்த 6 மாதங்களாக தமிழகத்தில் ஒற்றை எண்ணிக்கையில் கொரோனா தொற்று பாதிப்பு இருந்தது. நேற்று தமிழகத்தில் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காய்ச்சல் பாதிப்பு இருப்பவர்களுக்கு ஆர்டிபிசிஆர் டெஸ்ட் எடுக்கப்படுகிறது.
கர்ப்பிணி தாய்மார்கள், வயது முதியவர்கள், இணை நோய் உள்ளவர்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது முககவசம் அணிந்து செல்வது கட்டாயம்” என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
காலநிலை மாற்றம் மீதான தேசிய கருத்தரங்கம்: ஆய்வு கட்டுரை சமர்ப்பிக்க அழைப்பு!
வைகுண்ட ஏகாதசி: பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு!