பயணிகளிடம் பயணச்சீட்டு வாங்க சில்லறை கொடுக்க வேண்டும் என்று நிர்பந்தம் செய்யக்கூடாது என்று மாநகர் போக்குவரத்து கழகம், ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
இதுகுறித்து மாநகர் போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “பேருந்தில் ஏறும்போதே பயணச்சீட்டு வாங்க சில்லறையாக கொடுக்க வேண்டும் என்ற வாக்குவாதத்தில் நடத்துனர்கள் ஈடுபடுவதாக தெரிவித்து பயணிகளிடமிருந்து தொடர்ந்து புகார்கள் பெறப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக மாநகர் போக்குவரத்து கழக நடத்துனர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகிறது.
அதன்படி, மாநகரப் போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணிகள் ஏறும்போதே பயணச்சீட்டு வாங்க சில்லறையாக கொடுக்க வேண்டும் என நடத்துனர்கள் நிர்பந்தம் செய்யக்கூடாது.
பயணிகள் கொடுக்கும் பணம் மற்றும் நாணயங்களை பெற்று உரிய மீதித் தொகையை வழங்க வேண்டும்.
பணிமனைகளில் பணியின்போது நடத்துனர்களுக்கு வழங்கப்படும் முன்பணம் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கும்போது முறையாக பயன்படுத்திட வேண்டும்.
பயணிகளிடத்தில் சில்லறை தொடர்பான விவாதங்களை தவிர்த்து கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்.
இதுதொடர்பாக புகார்கள் பெறப்பட்டால் சம்பந்தப்பட்ட நடத்துனர் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…