மதுரை விமான நிலையத்தில் முதல்வரிடம் கஞ்சா பொட்டலத்துடன் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகி இன்று (ஏப்ரல் 30) சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், குடும்பத்துடன் ஓய்வெடுப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கொடைக்கானலுக்கு புறப்பட்டு சென்றார். அதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு சென்ற முதல்வரை பாஜக OBC மாநில செயற்குழு உறுப்பினர் சங்கரபாண்டியன் நேரில் சந்தித்து மனு அளிக்க காத்திருந்தார்.
அவர் தனது மனுவில், ”கடந்த 2 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் போதை – கஞ்சா பழக்கம் அதிகரித்துள்ளதாகவும் இதனால் மாணவர்கள், ஏழைத் தொழிலாளர்கள், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. எனவே தமிழ்நாட்டை போதைப்பொருள் புழக்கத்தில் இருந்து காத்திட வேண்டும் என அவர் வலியுறுத்தியிருந்தார்.
முதல்வரை கண்டதும், அவருக்கு அருகில் நெருங்கிய சங்கரபாண்டியன், மனுவுடன் 8 கிராம் கஞ்சா பொட்டலத்தையும் அளிக்க முயன்றார். ஆனால் அதற்குள்ளாக அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவரை அப்புறப்படுத்தி அவனியாபுரம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
இதையடுத்து சங்கரபாண்டியன் மீது 294 b, 353, 506(ii) உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா