அழகர்கோயிலில் மூலவருக்கு படைக்கும் நைவேத்தியம் சற்றே வித்தியாசமானது. அது அழகர் கோயில் தோசை. பச்சரிசி மாவுடன் உளுந்து, சீரகம், பெருங்காயம், சுக்கு இவற்றைக் குறிப்பிட்ட அளவு கலந்து செய்யப்படும் தோசைதான் அது. மேலும் தென் மாவட்டங்களில் உள்ள பெருமாள் கோயில்களில் கொடுக்கப்படும் முதன்மை பிரசாதமான இதை நீங்களும் வீட்டிலேயே செய்து சுவைக்கலாம்.
என்ன தேவை?
பச்சரிசி – 200 கிராம்
உளுத்தம்பருப்பு – 100 கிராம்
பாசிப்பருப்பு – 50 கிராம்
துவரம்பருப்பு – 50 கிராம்
பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்
சுக்குத்தூள் – அரை டீஸ்பூன்
மிளகு – 2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சோடா உப்பு – அரை டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
பச்சரிசி, உளுந்து, துவரம் பருப்பு, பாசிப்பருப்பைத் தனித்தனியாக தண்ணீர் ஊற்றி, ஒன்றரை மணி நேரம் ஊற வைக்கவும். இதை மிக்ஸியில் தனித்தனியாக தண்ணீர் சேர்த்து அரைத்து, ஒரு பாத்திரத்தில் ஒன்றாகக் கலந்து வைக்கவும்.
இதை தோசை மாவு பதத்துக்குக் கரைத்து 5 மணி நேரம் புளிக்க விடவும். தேவையானவற்றில் மீதம் இருக்கும் அனைத்துப் பொருட்களையும் மாவில் சேர்த்து கலந்து மாவை தோசையாக ஊற்றி வார்த்தெடுத்துப் பரிமாறவும்.