ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்து ரூ.7,000 கோடி வரையில் நிதி திரட்ட அரசு முடிவு செய்துள்ளது.
அரசுக்குச் சொந்தமான விமானப் போக்குவரத்து சேவை நிறுவனமான ஏர் இந்தியாவுக்கு ரூ.55,000 கோடிக்கு மேல் கடன் சுமை இருக்கிறது. போதிய வருவாய் ஈட்ட முடியாமலும் தவித்து வருவதால் ஏர் இந்தியாவின் பங்குகளை விற்பனை செய்து நிதி திரட்டும் முயற்சி சென்ற ஆண்டின் மே மாதத்திலேயே மேற்கொள்ளப்பட்டது. ஏர் இந்தியாவின் பங்குகளை வாங்க எவரும் முன்வராததால் இத்திட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிட்ட அரசு, அதிக மூலதனம் செலுத்தி ஏர் இந்தியாவை வருவாய் பாதையில் பயணிக்க வைக்கும் முயற்சியில் இறங்கியது.
ஏர் இந்தியாவுக்கு ரூ.980 கோடி நிதி வழங்க ஆகஸ்ட் மாதத்தில் நாடாளுமன்ற உத்தரவு கிடைத்தது. இந்த மாதத் தொடக்கத்தில் ரூ.2,345 கோடி பங்கு முதலீட்டுக்கும் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில், 2019-20 நிதியாண்டுக்குள் ஏர் இந்தியாவின் பங்குகளை விற்பனை செய்து 1 பில்லியன் டாலர் (ரூ.7,000 கோடி) நிதி திரட்ட அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே ஏர் இந்தியாவுக்குச் சொந்தமாக மும்பையில் உள்ள 27 மனைகள், அகமதாபாத்தில் உள்ள ஏழு மனைகள், புனேவில் இரண்டு மனைகள் மற்றும் ஓர் அலுவலகம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.�,