சேலத்தில் பணம் கொடுத்தது போன்று வெளியான காட்சிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்திருக்கிறார்.
தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 18) நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் (ஏப்ரல் 16) ஓய்வடைந்தது. அரசியல் கட்சித் தலைவர்கள் நேற்று முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
திமுக தலைவர் ஸ்டாலின் திருவாரூரிலும் , தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும் பிரச்சாரத்தை நிறைவு செய்தனர்.
சேலத்தில் வீதி வீதியாக நடந்து சென்று முதல்வர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பட்டைக்கோயில், சின்னக்கடை வீதி, பெரிய கடை வீதி, பஜார் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது சந்தைப் பகுதி ஒன்றின் வழியாக வாக்குச் சேகரித்தபடி சென்ற முதல்வர், வாழைப்பழம் வியாபாரம் செய்யும் பெண் ஒருவரிடம் வாக்கு கேட்டார். தன்னிடம் ஓட்டு கேட்ட முதல்வருக்குக் கடையிலிருந்து வாழை சீப் ஒன்றைக் கொடுத்திருக்கிறார் அந்தப் பெண். பழத்தை வாங்கும்போது அதற்கு எடப்பாடி பணமும் கொடுத்திருக்கிறார்.
இதற்கிடையில் முதல்வர் பணம் கொடுக்கும் காட்சி மட்டும் சமூக வலைதளங்களில் வைரலானது. அதிமுகவினர் ஓட்டுக்காகப் பணம் கொடுக்கின்றனர் என்று எதிர்க்கட்சிகள் கூறி வரும் நிலையில் முதல்வரின் வீடியோ தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வந்தது.
இந்த நிலையில் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டி அளித்த முதல்வர் தான் பழத்துக்குத்தான் பணம் கொடுத்தேன் என்று தெரிவித்துள்ளார்.
வாக்கு சேகரிக்கும்போது பழக்கடைக்காரர் பழம் கொடுத்தார், அதற்குத்தான் பணம் கொடுத்தேன் என்று தெரிவித்த முதல்வர் திமுக போன்று நான் எதையும் இலவசமாக வாங்குவதில்லை. நான் பணம் கொடுக்கும் காட்சியைக் காட்டுகிறார்கள். பழம் வாங்கும் காட்சியைக் காண்பிப்பதில்லை. தவறான செய்திகளைப் பரப்புகிறார்கள். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.
வேலூர் தேர்தல் ரத்து செய்தது குறித்துப் பேசிய அவர், தேர்தல் ரத்து செய்யப்பட்டிருக்கக் கூடாது, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.�,”