ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே செயல்பட்டுவந்த பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தித் தகர்த்தனர்.
இந்திய நிலைகளைக் குறிவைத்து தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்திவரும் நிலையில், பாகிஸ்தான் நிலைகளைக் குறிவைத்து இன்று இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லையருகே 500 மீட்டர் தொலைவில் தங்கி பாகிஸ்தான் ராணுவம் செயல்பட்டுவந்தது. பாகிஸ்தான் ராணுவம் உருவாக்கிய நிலைகளில் இருந்து, தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ பாகிஸ்தான் ராணுவம் உதவி செய்துவந்தது.
இந்த மாதத் தொடக்கத்திலிருந்து இந்திய ராணுவ முகாம் மற்றும் மற்ற நிலைகளைக் குறிவைத்து பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தியது. இதில் 6 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அந்தத் தாக்குதல்களுக்கு இந்திய ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்தும்வந்தது.
இந்நிலையில் பூஞ்ச் மாவட்டத்தின் மென்டார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று மாலை அத்துமீறித் தாக்குதல் நடத்தினர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவத்தினரும் தாக்குதல் நடத்தினார்கள். பாகிஸ்தானின் நிலைகளை இந்திய ராணுவத்தினர் ராக்கெட் லாஞ்சர்கள் மூலம் குண்டு வீசியும் துப்பாக்கி சூடு நடத்தியும் தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தின் நிலைகள் முற்றிலும் தகர்த்தப்பட்டுவிட்டன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவைகள் வெளியிடப்படவில்லை. இரவு முழுவதும் தாக்குதல் நடைபெற்றதால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவிவருகிறது.
�,